Tuesday, 20 December 2016

திரைப்பட உணவுக் கோட்பாடு





இந்த காலத்தில் எந்த ஒரு விஷயத்தைச் சொன்னாலும் அதை ஒரு சித்தாந்தத்தின் அல்லது கோட்பாட்டின் அடிப்படையில் சொல்லவேண்டும் என்று பலரும் அறிவுறுத்துகின்றனர். அந்த விதத்தில் நான் இங்கு சொல்லவரும் கருத்துக்களை நடைமுறையில் பேசப்படுகின்ற ஏதாவது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் விளக்க முடியுமா என்று தெரியவில்லை.
நான் அனுபவித்த, கற்றுக்கொண்ட விஷயங்களை திரும்பிப் பார்க்கையில், இங்கே சொல்லவரும் விஷயங்களை ஒரு கருத்துடன் பொருத்திப்பார்க்க முடியும் என்று நன்றாகவே தெரிந்தது. அந்த கருத்தையே ஒரு கோட்பாடாக இங்கே குறிப்பிடுகிறேன்.
சினிமா என்கிற பொழுதுபோக்கு, கலை வடிவம் இந்திய மக்களிடம், அதிலும் குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம் போன்ற தென்னக மாநில மக்களிடம் ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தை சாதாரணமாக சொல்லிவிட முடியாது.
இவர்களைப் பொருத்தவரை திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு சாதனமோ அல்லது கலை வடிவமோ அல்ல. உயிர்கள் அனைத்திற்கும் சுவாசத்திற்கு அடுத்தபடியாக உணவு எந்த அளவுக்கு தேவையோ அப்படித்தான் மனிதனுக்கும் உணவு இருந்து வருகிறது.
இந்த மக்களுக்கு திரைப்படமும் ஒரு உணவுபோலத்தான் இருந்து வருகிறது. உணவுக்கு கொடுக்கும் மரியாதையைவிட இவர்கள் திரைப்படத்திற்கு தருகின்றனர். திரைப்படத்தை தங்களுடைய வாழ்வின் ஒரு பகுதியாகவே இவர்கள் உணருகின்றனர்.
மற்ற மாநில மக்களிடம் இந்த உணர்வு இந்த அளவுக்கு இல்லையென்றாலும், ஒரளவுக்கு இதே எண்ணம்தான் அவர்கள் மத்தியிலும் இருக்கிறது.
அதனால் திரைப்படத்தை மற்றநாடுகளில் உள்ளவர்கள் பார்ப்பதுபோல ஒரு பொழுதுபோக்கு சாதனமாக அல்லது கலைவடிவமாக மட்டும் பார்ப்பது சரியாகாது.
திரைப்படம் என்பது மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றுஎன்ற கோணத்தில்தான் பார்க்கவேண்டும்
இப்படியான ஒரு கோணத்தில் திரைப்படத்தை பார்க்கும்போதுதான், பல புதிய புதிய கேள்விகள் எழுகின்றன. அத்துடன் திரைத்துறைக்குள்ளேயே இருந்துவரும் பல கேள்விகளுக்கு விடைகளும் கிடைக்க ஆரம்பிக்கின்.
திரைப்படம் சார்ந்த எழுத்து, படைப்பு, ரசனை, விமர்சனம் என பல விஷயங்களை இந்த கருத்தின் அடிப்படையில் ஆராயந்தால் பல பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
எத்தனையோ உணவு வகைகள் உலகில் இருக்கின்றன. சைவம், அசைவம் என்ற இரு பிரிவுகளில், எத்தனையோ சமையல் முறைகள்! எத்தனையோ உணவு பழக்கங்கள்! உணவுகள்!
அதைப்போலத்தான் திரைப்படத்துறையிலும் இருபிரிவுகளும், அதன் கீழ் பல விதமான படைப்புகளும் இருக்கின்றன.
இந்த கருத்துக்களை உள்ளடக்கித்தான் திரைப்பட உணவுக் கோட்பாடு என்றபெயரில் ஒரு அடிப்படை கோட்பாடாக இங்கே தருகிறேன். அதுதான் இது:
திரைப்படம் என்பது மனிதனுக்கு ஒரு உணவு, இந்த உணவை உட்கொள்ளாமல் மனிதன் வாழலாம், ஆனால் இந்த உணவின் பக்கவிளைவுகளை எதிர்கொள்ளாமல் யாராலும் இவ்வுலகில் வாழ முடியாது.”
(திரைப்படம் என்பது அனைத்து காட்சி ஊடகங்களையும் உள்ளடக்கியது.)
இந்த கோட்பாட்டின் அடிப்படையில் திரைத்துறையில் உள்ள ஏறக்குறைய அனைத்து விஷயங்களையும் ஆய்வுக்கு உட்படுத்த முடிகிறது என்பதில் ஐயமில்லை. தொடர்ந்து வரும் அத்தியாயங்களில் தேவைப்படும் இடங்களில் இது குறிப்பிடப்பட்டுள்ளன.


Friday, 9 December 2016

மாற்றுப்பார்வை





மாற்றங்கள் - அவை மட்டும்தான் உலகில் மாறாதவைஎன்பது உலக நியதி.
காலமாற்றங்களுக்கு ஏற்ப மனிதனின் சிந்தனைகளும் ஒவ்வொரு விஷயத்திலும் அவன் கொண்ட பார்வைகளும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன. உண்மையில் அப்படிப்பட்ட மாற்றங்களைத்தான் அறிவு வளர்ச்சி என்றே சொல்கிறோம்.
காரணம் இப்படிப்பட்ட சிந்தனை மற்றும் பார்வை மாற்றங்கள்தான் எல்லா கண்டுபிடிப்புகளுக்கும், வளர்ச்சி களுக்கும் அடிப்படையாக இருக்கின்றன.
மனிதர்களின் மாற்றுப்பார்வை என்பது எந்த ஒரு விஷயத்திலும் ஏதோ ஒரு தனிமனிதன் எடுத்துக்கொள்ளும் வித்தியாசமான ஒரு முயற்சியில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
வழக்கமாக எல்லோரும் பார்க்கும் கோணத்தை விட்டுவிட்டு மற்றொரு புதிய கோணத்தில் ஒருவர் பார்க்கும் போது அந்த விஷயத்தின் அடிப்படையே சிலநேரங்களில் வேறாக தெரியும்.
எல்லோரும் ஒரு விதமாக யோசிக்க அல்லது பழைய கோட்பாடுகளை பின்பற்ற, ஒருசிலர் வேறுவிதமான கோட்பாட்டை பின்பற்றும்பொழுது ஒரு தர்க்கரீதியிலான விவாதம் ஒவ்வொருவர் மனதிலும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகிறது.
அதன் விளைவாக, ஒன்று ஏற்கனவே பின்பற்றிவரும் மரபுரீதிதான் சிறந்தது எனத் தெரியும், அல்லது மரபுரீதியை விட்டு புதிய பாதைக்கு மாறவேண்டிய காலம் நெறுங்கிவிட்டது எனப் புரியும்.
இப்படி தெரிந்துகொண்ட அல்ல புரிந்துகொண்ட கருத்துக்களை பின்பற்றி நடக்க ஆரம்பித்தால், அதுவே உலகில் பல மாற்றங்களுக்கு மட்டுமல்ல சாதனைகளுக்கும் அடிப்படையாக மாறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
திரைத்துறையும் இந்த விஷயத்தில் விதிவிலக்கானது அல்ல. திரைப்படம் சம்பந்தமான பொதுவான ஒரு பார்வை ஆரம்பகாலத்திலிருந்தே இருந்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமல்ல, படைப்பாளிகளும் கூட சில பிம்பங்களை உருவாக்கிவிட்டு, அதை பெரிதாக பிரபலப்படுத்தி, அந்த பிம்பங்களை கடவுள் போல வழிபடுகின்றனர்!
என்றோ, எங்கோ, யாரோ சொன்ன கருத்துக்களை அலசாமல், ஆராயாமல் அப்படியே பின்பற்றுகின்றனர். அவற்றில் மிக முக்கியமானவை என்று மூன்று விஷயங்களைச் சொல்லலாம். குறிப்பிட்டுச் சொன்னால் மூன்று நம்பிக்கைகள்!
ஒன்று - திரைப்படம் என்பது இயக்குநர்களின் கலை என்று நினைப்பது,
இரண்டு - படங்களை கலைப்படங்கள், வியாபாரப் படங்கள் என இருவகைப்படுத்துவது,
மூன்று - இதுதான் நல்ல படம்என்று ஒரு படத்தை வரையறுப்பது.
இந்த மூன்று கருத்துக்களுமே வெறும் நம்பிக்கைகள் தானே தவிர மாற்றமுடியாத அல்லது திருத்தக்கூடாத சித்தாந்தங்கள் அல்ல.
இந்த நம்பிக்கைகளின் ஆதாரத்தை கேள்வி கேட்பதற்கு, புதிய கருத்துக்களை உருவாக்குவதற்கு, முதலில் தற்பொழுது திரைத்துறையில் உள்ள செயல்பாடுகள், நடைமுறைகள், நிலைமைகள் பற்றி தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.
இரண்டாவது மற்றும் மூன்றாவது நம்பிக்கைகள் பற்றி தற்பொழுது இங்கே ஆராய்ச்சி நடத்த தேவையில்லை. முதலில் முதல் நம்பிக்கையையும் அதன் அடிப்படையில் திரைத்துறையில் உள்ள பிரச்சினைகளை ஆராய வேண்டும். காரணம் இதன் அஸ்திவாரமாகக் கொண்டுதான் மற்ற நம்பிக்கைகளிலும், அதன் தாக்கங்களிலும் ஒரு மாற்றத்தை கொண்டுவரமுடியும்.
அதனால் முதல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களை வழக்கமாக யாரும் பார்க்காத, அல்லது இதுவரை பார்க்கத் தவறிய கோணத்தில் பார்த்த்தனால் தோன்றிய புதிய கருத்துக்களை அடுத்த அத்தியாயங்களில் சுருக்கமாக காணலாம்.