Sunday 18 May 2014

எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர்




முன்னே குறிப்பிட்டது N;;பால் - நடிப்பு, ஒளிப்பதிவு, இசை போன்ற கலைகளையும் வசனம் பாடல்கள் போன்ற இலக்கியத்தையும் படத்தொகுப்பு, ஒலிப்பதிவு போன்ற தொழில் நுட்பத்தையும் - திரைக்கதை எழுத்தாளன் கற்பனையில் இணைக்க, அதை வெற்றிகரமாக இயக்குநர் காட்சிப்படுத்த தயாரிப்பாளர் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் திரைப்படம்.
திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என்கிற மூன்று பேரும்தான் திரைப்படத்தின் உயிர், இயக்கம், உடல் என விளங்குகின்றனர். உயிரும் இயக்கமும் இருந்து உடல் இல்லையென்றால் யாராலும் பார்க்க முடியாது. உயிரும் உடலும் இருந்து இயக்கம் இல்லையேல் ரசிக்க முடியாது. உடலும் இயக்கமும் இருந்து உயிர் இல்லையென்றால் என்ன இருந்தும் பயனில்லை. இதுபோலத்தான் திரைப்படத்திலும் திரைக்கதை எழுத்தாளர் - இயக்குநர்- தயாரிப்பாளர் ஆகியோரின் பங்கும். இவர்களில் ஒருவர் சரியில்லை என்றாலும் மொத்தத்தில் படம் தோல்விதான்.
உலகில் எங்கும் உள்ளது போல நம் நாட்டிலும் முன்பு திரைப்படங்களை தயாரித்தவர்கள்தான் இயக்கியும் வந்தனர். அவர்களேதான் ஸ்டுடியோ அதிபர்களாகவும் இருந்தனர். மற்ற அனைவரும் அவர்களது கட்டுப்பாட்டில் இருந்து வந்தனர்.
காலப்போக்கில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள் தனித்தனியாக தங்கள் பணிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அதே வேளையில் அனைவரும் ஒருவருடன் ஒருவர் இணைந்து செயல்பட்டு வந்தனர். அதுதான் சினிமாவின் பொற்காலம்.
நாளடைவில் நாயகர்கள் இவர்களைவிட புகழ்பெற்று வளர, இவா;கள் அந்த நடிகர்களை சார்ந்து படங்களை எடுக்க ஆரம்பிக்க, திரைத்துறையில் நடிகர்களின் ஆதிக்கம் மேலோங்கியது. இருப்பினும் ஒரு சில தயாரிப்பாளர்களுக்கு அவர்களுக்கே உரிய மரியாதை கிடைத்து வந்தது.
பிறகு ஒரு காலகட்டத்தில் இயக்குநர்கள்தான் சினிமாவின் ஆணிவேர் என்ற எண்ணம் வளர்ந்தது. அதற்கேற்ப பல இயக்குநர்கள் தங்கள் திறமையைக் காட்டி சாதனைகளும் படைக்க சினிமாவில் இயக்குநர்களின் ஆதிக்கம் மேலோங்கியது.
படத்தின் உயிராக விளங்கும் எழுத்தாளர்கள் இவர்களின் அதிகாரத்தின் கீழ் காணமல் போயின. (மலையாளம் போன்ற ஒரு சில துறைகள் இதற்கு விதிவிலக்கு.)
தற்பொழுது கடந்த இருபது வருடங்களாக மீண்டும் நட்சத்திர நடிகர்களின் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது.
படங்களுக்கு உயிர் கொடுக்கும் எழுத்தாளர்களுக்கும் உடலாக இருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இங்கு மரியாதை இல்லாமல் போய்விட்டது. அதனால்தான் திரைத்துறைக்கு வரவேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு இளைஞனும் நடிகராக வேண்டும் அல்லது இயக்குநராக வேண்டும் என்றே தங்கள் படிப்பை முடித்தும் முடிக்காமலும் தலைநகரங்களை நோக்கி வண்டி ஏறுகின்றனர். அது முடியாதவர்கள் ஏதாவது தொழில் நுட்பத்தை கற்று அந்த வழியாக திரைத்துறையில் வெற்றி பெற முயற்சி செய்கின்றனர்.
இன்றைய காலகட்டத்தில் குறிப்பாக தமிழில் எழுத்தாளர் என்றாலே அது வசனம் எழுதுபவர் என்றாகி விட்டது. தயாரிப்பாளர் இயக்குநர்களை படத்தின் கேப்டனாக மாற்ற, சில நட்சத்திரங்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்தனர். புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பைத் தர அவர்கள் இந்த நட்சத்திரங்கள் சொன்னபடி நடக்கவேண்டிய சூழ்நிலை உருவானது. அது இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவே மற்றவர்களுக்கு மரியாதை இல்லாமல் போனதற்கு காரணமாக மாறியது.
திரைத்துறையில் ஒரு எழுத்தாளனாக வரவேண்டும் அல்லது தயாரிப்பாளராக நிறைய நல்ல படங்களை எடுத்து வெற்றி பெறவேண்டும் என்று யாரும் வருவதில்லை. இதுதான் திரை உலகின் சாபம். இதற்கு காரணம் ஒன்றுதான். திரைத்துறையின் ஆணிவேர்களான எழுத்து, இயக்கம், தயாரிப்பு என்ற மூன்றிற்கும் முதன்மையான மரியாதை கிடைக்காததுதான் அது. அப்படி எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கு திரைத்துறையில் முதல் மரியாதை கிடைத்தால் அதுதான் திரையுலகின் பொற்காலம்.



No comments:

Post a Comment

Let others know your opinions about this post