Showing posts with label சாதனையாளர்கள். Show all posts
Showing posts with label சாதனையாளர்கள். Show all posts

Friday, 13 May 2016

சார்லி சாப்ளின்


2-1-16

மேதினத்தையொட்டி நேற்று ஒரு திரையிடலும் அதைத் தொடர்ந்து ஒரு சந்திப்பும் டிஸ்கவரி புக் பேலஸ் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு சில நண்பர்கள் அந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். சார்லி சாப்ளின் நடித்தமாடர்ன் டைம்ஸ்திரையிட்டதில் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி!
உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை கொண்டாடும் இந்த நாளில் பேசுவதற்கு பொருத்தமான படம்தான் என்று நான் நம்புகிறேன்.  
சாதாரணமாக சார்லி சாப்ளின் படங்களை நகைச்சுவைப் படங்களாகத்தான் பார்க்கின்றனர். அதனால்தான் அந்த படங்கள் உலகம் முழுவதும் சிறுவர்களின் படங்களாக மதிக்கப்படுகின்றன என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் அவை சிறுவர்களின் படங்கள் மட்டும்தானா?
தன்னுடைய மரணத்திற்கு பிறகும் உலகின் மிகவும் பிரபலமான நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் தான். அவருடைய படங்கள் ஸ்லாட்பஸ்டிக் காமடி நிறைந்த படங்கள் தான், அவர் நகைச்சுவை உணர்வு கொண்ட ஒரு திறமையான நடிகர்தான். ஆனால், ஒரு படைப்பாளி என்ற முறையில் அவர் மிகவும் சீரியஸான ஆள்தான். அவர் தன்னுடைய படைப்புகளில் சாதாரண மக்களின் வருத்தம், வலி, இயலாமை போன்றவையைத்தான் சொல்லியிருந்தார். இவற்றை அழுத்தமாக சொல்வதற்கும் அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கும் அவர் பயன்படுத்தியது நகைச்சுவை பாதையைத்தான்!
உண்மையில் அவர் காமடியை படைத்தார், ஆனால் அவர் ஒரு காமடியன் கிடையாது!
ஒரு தனித்துவமான பாணியில் அனைத்தையும் சொல்வதற்கு அவர் தன் உடலை பயன்படுத்தினார். அது அவரை தனிப்பிறவியாக மாற்றியது. அந்த தோற்றம் உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளின் வரவேற்பை பெற்றது. ஒரு காலத்து குழந்தைகள் வளர்ந்து பின்வரும் வருடங்களில் பெரியவர்களாக மாறுவார்கள். குழந்தைப்பருவத்தில் இருந்தது போலவே அவர்கள் தொடர்ந்து சாப்ளினை போற்றி வருகின்றனர். அப்படி சார்லி சாப்ளின் எந்த காலத்திலும் மக்களால் விரும்பப்டுபவர் ஆகிறார்.
திரைத்துறையில் சார்லி சாப்ளின், ப்ரூஸ்லீ, ஜாக்கி சான் ஆகியோருக்கு ஒரு ஒற்றுமை இருக்கிறது. இவர்களுடைய எந்த படத்தின் எந்த ஒரு பகுதியை எடுத்தாலும், அது ஒரு நிமிடமே ஆனாலும் சரி, அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கிற அதே உணர்வுகளுடன் ரசிக்க முடியும்.
மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்ல முன்வந்ததால் அவர்களில் சார்லி சாப்ளின் வித்தியாசமாக காணப்படுகிறார். அவருடைய படங்கள் நடுத்தரம் மற்றும் கீழ்மட்டத்தில் இருக்கும் மக்களின் பிரச்சினைகளை விவாதிக்கின்றன. அவருடைய காலத்தில அவர் ஒரு கம்யூனிஸ்ட் என்று அழைக்கப்பட்டார். ஆனால், ஒரு படைப்பாளி என்ற முறையில் தன்னுடைய படைப்புகளை அவர் ஒரே அரசியல் பார்வையில் அடக்கிவிடவில்லை.
அவர் கம்யூனிஸ்ட் சித்தாந்த பார்வையில் இருந்த தவறுகளையும் விமர்சித்தார். இந்தமாடர்ன் டைம்ஸ்அதற்கு நல்ல உதாராணமாக சொல்ல்லாம். வழக்கம் போலவே, அவர் இதிலும் ஏழைகளின் பிரச்சினைகளையும் வலிகளையும் வெளிக்காட்டுகிறார். கூடவே பொதுவுடமை மற்றும் முதலாளித்துவம் ஆகியவற்றை ஒரே போல கிண்டல் செய்கிறார்.
சார்லி சாப்ளினின் இன்னொரு தனித்துவம் என்பது அவருடைய நேர்மறை எண்ணம் தான். அவர் தன்னுடைய படங்களில் ஏழைகளின் தோல்விகளையும் நஷ்டங்களையும் சொன்னாலும், அவருடைய எந்த ஒரு படமும் எதிர்தமறையான எண்ணத்துடன் முடிவடைந்ததில்லை. அவர் தன்னுடைய படங்களை வருங்காலத்தைப்பற்றிய ஒரு நேர்மறை கனவுடன் தான் வழக்கமாக முடித்து வைப்பார்.
ஒவ்வொரு காட்சியிலும் அவர் உடல் மொழியும் அசைவுகளும் நேர்மறை எண்ணங்களை தூண்டிவிடும். சர்க்கஸ் கூடாரத்தில் கொடூர மிருகங்களுடன் விளையாடுவதும் (சிட்டி லைட்ஸ்), ஹோட்டலில் பாட்டு பாடுவதும் (மாடர்ன் டைம்ஸ்) அவருடைய இந்த குணத்திற்கு உதாரணமாக சொல்லலாம். இந்த குணம் அவருடைய உடலில் பிறவியிலேயே இருக்கிறதென்றே நான் நினைக்கிறேன்.
திரையுலக சரித்திரத்தில் அவருடைய காட்சிகளையும் அல்லது அவருடைய படங்களை முழுவதுமாகவும் பலரும் பல முறை காப்பியடித்திருக்கின்றனர். நமது நாட்டிலும், சாப்ளின் படங்களை பின்பற்றி பல படங்கள் வெளிவந்திருக்கின்றன.
அவருடைய படங்களுடன் ஒப்பிட வேண்டியிருக்கும் என்பதால் உண்மையில் அவருடைய படங்களை நகலெடுப்பதும், அவற்றை வெற்றிபெறச்செய்வதும் புதுப்படைப்பாளிகளுக்கு மிகப்பெரும் சவால்தான்

மேதினத்தில் சார்லி சாப்ளினை நினைத்துப்பார்ப்பதே அவருக்குச் செய்யும் மரியாதைதான்!

Tuesday, 8 September 2015

மோகன்லால் படங்கள் – சிறு குறிப்பு



மோகன்லால் பெரும்பாலும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இவர் இதுவரை நான்கு முறை தேசிய விருதுகளைப் பெற்றிருக்கிறார், (இரண்டு முறை மிகச்சிறந்த நடிகருக்கான விருதுகளையும், ஒருமுறை மிகச்சிறந்த நடிகருக்கான சிறப்பு நடுவர் குழ விருதும், ஒருமுறை சிறந்த படத் தயாரிப்பாளர் விருதையும் பெற்றிருக்கிறார். மேலும் சிறந்த நடிக்கிற்காக ஒன்பது முறை கேரள மாநில அரசு விருதையும் பத்து முறை ஃபிலிம்ஃபேர் விருதும் பெற்றிருக்கிறார். இவர் இந்திய திரைப்பட உலகத்தின்முன்னேற்றத்திற்காக ஆற்றிய சேவைகளைப் போற்றும் வகையில் இந்திய அரசு இவருக்கு 2001ஆம் ஆண்டு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவித்தது. 2009 ஆம் ஆண்டில், இந்தியத் தரைப்படை இவரை கௌரவிக்கும் வகையில் லெப்டினன்ட் கேணல் பதவியை வழங்கியது. இவ்விருதை பெரும் முதல் இந்திய நடிகர் இவர்தான். தேசிய அளவில், மிகச்சிறந்த நடிகர் விருதிற்காக மிகவும் அதிகமான பரிந்துரைகள் பெற்ற ஒரே நடிகர் இவர்தான்.
மோகன்லால் பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது சராசரி மாணவனாகத்தான் திகழ்ந்தார். அதே சமயம் கலை உலகம் அவர் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது. பள்ளிக்கூட நாடகங்களில் ஆர்வத்துடன் பங்கேற்றார். பொதுவாக பள்ளியின் பத்தாம் வகுப்பு மாணவர்களே சிறந்த நடிகனாக தேர்ந்தெடுக்கப்பட்டு வந்த காலகட்டத்தில், ஆறாவது வகுப்பு மாணவரான மோகன்லால் பள்ளிக்கூடத்தில் சிறந்த நடிகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு, இவர் திருவனந்தபுரத்தில் உள்ள மகாத்மா காந்தி கல்லூரியில் தமது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். இவர் நடிப்புடன் கொண்டிருந்த இணைப்பை தொடர்ந்துவந்தார். மேலும் கல்லூரியில் படிக்கும்போதும் சிறந்த நடிப்பிற்கான பல விருதுகளை இவர் வென்றார். இங்குதான் இவருக்கு நாடகத்தின் மீதும் திரைப்படங்களின் மீதும் பற்றுகொண்ட சக மாணவநண்பர்களுடன் நட்பு ஏற்பட்டது. அவர்களில் சிலர் இவருடைய முதல் சாதனைக்கு வித்திட்டனர். அவர்களில் ப்ரியதர்ஷன் ,M.G.ஸ்ரீகுமார், சுரேஷ்குமார் மற்றும் மணியன்பிள்ள ராஜு போன்றவர்கள் மிகவும் பிரபலமான இயக்குனர்களாகவும், நடிகர்களாகவும், தயாரிப்பாளர்களாகவும் உருவெடுத்தார்கள். அவருடைய பள்ளி, கல்லூரி நண்பர்கள் இன்றும் அவருடன் திரைப்படத்துறையில் உள்ளனர்.
மோகன்லால் முதன் முதலில் "திறநோட்டம்" (1978) என்ற படத்தில் நடித்தார். தணிக்கைக் குழுவினருடன் (சென்சார் போர்ட்) ஏற்பட்ட தகராறுகள் காரணமாக இப்படம் ஓரிடத்தில் மட்டும்தான் வெளியானது . 1980 ஆம் ஆண்டில் இவர்  பாசில் இயக்கத்தில் வெளிவந்த ''மஞ்சில் விரிஞ்ச பூக்கள்'' என்ற மாபெரும் வெற்றிபடத்தின் மூலம் ஒரு முரண்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்து சாதனைப் படைத்தார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இவர் பலதரப்பட்ட படங்களில் நடித்து, படிப்படியாக தனக்கு முக்கியத்துவம் நிறைந்த பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்தார். இவற்றில் சிறுசிறு கதாபாத்திரங்களில் ஆரம்பித்து, கதாநாயகனின் நண்பன், வில்லன், குணச்சித்திரம் போன்ற அனைத்து கதாபாத்திரங்களும் அடங்கும்.
அந்த காலக் கட்டத்தில் பிரபலமான எழுத்தாளரான எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்கள் எழுதி, ஐ.வி சசி அவர்கள் இயக்கிய படமான உயரங்களில் என்ற படத்தில் நடித்தார். அதன் கதை ஒரு இளைஞன் தன் வளர்ச்சிக்காக எந்த ஒரு பெண்ணையும் ஏமாற்றத் தயங்காமல் துரோகம் இழைப்பதை கருத்தாகக் கொண்டது. இதன் முக்கிய கதாபாத்திரமான இளைஞனின் பாத்திரத்தில், ஆன்டி ஹீரோவாக, மோகன்லால் நடித்தார். இது அவருடைய நடிப்பின் சிறப்பை உயர்த்திக்காட்டிது. அதேநேரம் அவரது நண்பனும் கல்லூரியில் சக மாணவருமான இயக்குநர் ப்ரியதர்ஷனின் அறிமுகத் திரைப்படமான பூச்சைக்கு ஒரு மூக்குத்தி என்ற படத்தில் நகைச்சுவை வேடத்தில் நடித்தார்.
1986 ஆம் ஆண்டு முதல் 1995 வரையிலான கால கட்டம் பரவலாக மலையாளத் திரைப்பட உலகின் பொன்னான காலகட்டமாகக் கருதப்படுகிறது. அந்த காலகட்டத்தில் வெளிவந்த படங்கள் விரிவான திரைக்கதைகள், தெளிவான விவரணம் மற்றும் அருமையான நோக்கங்கள் நிறைந்த படங்களாக சிறப்பித்தன. கலை ரீதியிலான படங்களுக்கும், வணிக ரீதியில் எடுத்த படங்களுக்கும் இடையிலேயான இடைவெளியை மிகவும் குறுக்கியது.. படிப்படியாக உயர்ந்து வரும் இளம் கலைஞர்களில் ஒருவரான, திறமை வாய்ந்த மோகன்லால், பல தரப்பட்ட உணர்ச்சிகளை அனாயாசமாக வெளிப்படுத்தக்கூடிய அழகான பல வேடங்களில் நடிக்கும் வாய்ப்புக்களைப் பெற்றதோடல்லாமல், இவர் மலையாளத் திரை உலகில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுடனும் இயக்குனர்களுடனும் நல்லுறவை மேம்படுத்தவும் செய்தார்.
1986 ஆம் ஆண்டு அவருக்கு மிகவும் சிறந்த ஆண்டாக விளங்கியது. சத்யன் அந்திக்காடு அவர்களின் டி.பி. பாலகோபாலன் எம்.ஏ. என்ற திரைப்படம் அவருக்கு கேரள அரசின் சிறந்த நடிகருக்கான விருதை முதன்முறையாக பெற்றுத்தந்தது. இவர் நிழலுலக தாதாவாக நடித்த ராஜாவின்டே மகன் என்ற படம் மலையாளத் திரையுலகில் மோகன்லால் ஒரு சூப்பர் ஸ்டாராக வெளிப்படுவதை உறுதி செய்தது. அதே வருடத்தில் இவர், தாளவட்டம் என்ற படத்தில் மனநலக் காப்பிடத்தில் இருக்கும் நோயாளியாக நடித்திருந்தார். சன்மனசுள்ளவர்க்கு சமாதானம் படத்தில் வாடகைக்கு இருக்கும் குடும்பத்திற்கு பெரும் தொல்லைகள் கொடுக்கும் வீட்டு உரிமையாளர் கதாபாத்திரத்திலும், எம்.டி. வாசுதேவன் நாயரின் பஞ்சாக்னியில் பத்திரிகையாளர் வேடத்திலும், நமுக்கு பார்க்கான் முந்திரி தோப்புகள் படத்தில் காதல் வசப்பட்ட பண்ணையாளராகவும், காந்தி நகர் செகண்ட் ஸ்ட்ரீட் படத்தில் வேலையில்லாது தவிக்கும் இளைஞன் கூர்காவாக நடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுவதை சித்தரிக்கும் கதப்பாதிரமாகவும் நடித்தார்.
எழுத்தாளர் - இயக்குனர் ஜோடியாக திகழ்ந்த ஸ்ரீநிவாசன், சத்யன் அந்திக்காடு ஆகியோர் போன்ற சமூக பொறுப்போடு, சமுதாய சீர்கேடுகளை நையாண்டி செய்து சிந்திக்க வைக்கும் ஆற்றல் படைத்தவர்களுடன், இணைந்து பணியாற்றிய படம் நாடோடிக்கட்டு, இதில் வேலையில்லா இளைஞனாக நடித்தார். ''வரவேல்பு'' என்ற படத்தில் இவர் அரபு நாட்டில் இருந்து திரும்பி வரும் நாயகனாக நடித்தார், பேராசை கொண்ட உறவினர்களும் , பகைமை உணர்வுடன் நடத்தும் நாட்டுநிலவரத்தைக் கண்டு அஞ்சும் தொழில்முனைவோர் வேடத்தில் நடித்திருந்தார். இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கிய சித்ரம், கிலுக்கம்படங்களில் வசீகரமான காதல் கதாப்பாத்திரங்களில் நடித்து இளம் ரசிகர்களுக்கிடையே மிகவும் பிரபலமானார். இத்திரைப்படங்கள் இசைக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருந்தன.
இந்திய கதாநாயகர்கள் வழக்கமான கதாப்பாதிரங்கலையே ஏற்று நடித்து வந்த நேரத்தில் தூவானத்தும்பிகள் என்ற படத்தில் இரு பெண்களிடம் காதல் கொண்டு அவதிப்படும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடித்தார். இப்படத்தில் முதல் நாயகியிடம் அடி வாங்கிய மறு கணமே இன்னொரு பெண்ணிடம் காதல் வசப்படும் யதார்த்த நாயகனாக இவர் நடிக்கத் துணிந்தார். அம்ரிதம்கமைய என்ற படத்தில் இவர் கல்லூரியில் நையாண்டி செய்து, அறியாமல் கொன்று விட்ட ஒரு சிறுவனின் வீட்டிற்கே வந்து சேரும் கதாப்பாத்திரம் . தாழ்வாரம் என்ற படம் இந்த கால கட்டத்தில் வெளிவந்த குறிப்பிடத்தக்கப் படமாகும்.
எழுத்தாளர் லோஹிததாஸ் மற்றும் இயக்குனர் சிபி மலையில் ஆகியோர் இணைந்து ஜோடியாக உருவாக்கிய படங்கள் இவருக்கு மிகவும் பிடித்தமான மனம் கவரும் பாத்திரங்களைப் பெற்றுத்தந்தன. கிரீடம் என்ற படத்தில் சேது மாதவன் எனும் ஒருவன் போலீஸ்காரனாக வேண்டும் என்ற கனவு கண்டு கடைசியில் குற்றவாளியாக கூண்டில் நிற்பவனாக நடித்திருந்தார். இது அவருக்கு தேசிய அளவிலான சிறந்த நடிருக்கான சிறப்பு நடுவர் குழு விருதைப் பெற்றுத் தந்தது. இதற்கு அடுத்த வருடத்தில், பரதம் என்ற படத்தில் இவர் ஒரு மரபார்ந்த பாடகர் வேடத்தில் நடித்தார், இதில் பாடகரான தன் சகோதரன் மரணத்திற்கு தானே காரணமாகி விட்டேன் என்று வருந்துவதும், அவருடைய இறப்பால் மனம் வெதும்புவதும், அண்ணனின் மரணத்தை மறைத்துவைத்து தங்கையின் திருமணத்தை நடத்தத் துடிப்பதுமதான வேடத்தில் நடித்ததற்கு இவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.
90 ஆம் ஆண்டுகளிலும் இவர் தமது வெற்றிப் பயணத்தைத் தொடர்ந்தார், ஹிஸ் ஹைனெஸ் அப்துல்லாஹ் போன்ற மனதைக் கொள்ளை கொள்ளும் படங்கள் வெளியானது. இதில் இவர் இஸ்லாமியராக நடித்தார். அதில் நம்பூதிரி வேடம் பூண்டு ஒரு ராஜவம்சத்தினனைக் கொல்லத்துணிகிறார். இந்த கால கட்டத்தில் வணிக ரீதியாக வெற்றியடைந்த இதர திரைப்படங்கள்மிதுனம் , மின்னாரம் , தேன்மாவின் கொம்பத்து போன்ற படங்கள் 80 ஆம் ஆண்டுகளைப்போலவே மரபு சார்ந்த நல்ல திரைப்பட கதைகள் கொண்டவையாகவும், நல்ல பாத்திர அமைப்பு பெற்றவையாகவும் திகழ்ந்தன. தேவாசுரம் , ரஞ்சித் எழுதி ஐ.வி சசியின்இயக்கத்தில் உருவானது, மத்திய கேரளாவில் இராணுவ ஆட்சியின் காலத்தை சுட்டி காட்டும், அப்படத்தில் மோகன்லால் திமிர் பிடித்த, பணக்கார முரட்டுத்தனம் நிறைந்த வாலிபனாக தோன்றி வாழ்க்கையில் ஏற்படும் சம்பவங்கள் காரணமாக சஞ்சலமடைந்து கொஞ்சம் கொஞ்சமாக அடக்கமானவராக மனம் மாறும் பாத்திரத்தை அருமையாக வெளிப்படுத்தியிருப்பார். இயக்குனர் பத்ரனின் ஸ்படிகம் என்ற படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும், மோகன்லாலின் கதாபாத்திர அமைப்பும் புதுமையாக அமைந்து மாபெரும் வெற்றி படமானது. சிறந்த படங்கள் குறைவாக வந்துக்கொண்டிருந்த இக்கால கட்டத்தில் மணிசித்திரத்தாழ், போன்ற கலை மற்றும் வியாபார ரீதியான வெற்றிப்படங்கள் வெளிவந்தன மனிச்சித்திரத்தாழ் படத்தில் நடித்ததற்காக சோபனா சிறந்த நடிகிக்கான தேசிய விருதைப்பெற்றார்.
அவருடைய திரைப்பட வாழ்க்கையின் இந்த கால கட்டத்தில் கேரளத்தில் மோகன்லால் அடைந்த அளவற்ற மக்கள் செல்வாக்கின் காரணமாக, படத் தயாரிப்பாளர்கள் அவரை திரைப்படங்களில் எதற்குமே அஞ்சாத, யாராலும் வெல்ல முடியாத, நிஜ வாழ்க்கையை மிஞ்சும் கதாநாயகனாக பல படங்களில் நடிக்க வைத்து வியாபாரமாக்கினர். அந்த நாயக அந்தஸ்த்தை பயன்படுத்தி ஆறாம் தம்புரான் , நரசிம்ஹம் , ராவணப்பிரபு, நரன் போன்ற திரைப் படங்களைத் தயாரித்தனர். அவை யாவும் வெற்றிப்படங்களாகவே திகழ்ந்தன. ஆரம்பத்தில் அவை புதுமையாக காணப்பட்டாலும், காலப்போக்கில் இவ்வாறான படங்கள் நிஜ வாழ்க்கைக்கு ஒவ்வாமலும், மோகன்லாலை சுற்றியே வடிவமைந்ததாகவும் பல இடங்களில் இருந்து கடுமையாக விமர்சனங்களை எதிர்கொண்டது. 90 களின் இறுதியில் வெளிவந்த இயக்குநர் ப்ரியதர்ஷனின் காலாபானி இந்தியாவின் சுதந்திரப்போராட்டத்தில் அந்தமான் தீவில் உள்ள குறுகிய சிறைகளில் அடைத்து சித்திரவதைக்கு உட்பட்ட கைதிகளைப்பற்றிய கதையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டது.
இந்த நேரத்தில் தான் மலையாளம் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தியாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் மொழிப்படமான இருவரில் நடித்தார். இந்தப் படத்தில் மோகன்லால் அவரது அண்டை மாநிலமான தமிழ் நாட்டில் தனக்கென தனிப்பெரும் செல்வாக்கு பெற்ற நடிகர் எம்ஜிஆர் (தமிழக முன்னாள் முதல்வர்) அவர்களின் வேடத்தில் நடித்தார். பின் இந்திய-பிரெஞ்சு கூட்டுத் தயாரிப்பான வானப்ரஸ்தம் என்ற படத்தில், தமது அடையாளத்தையே இழந்த கதகளி நாட்டிய விற்பன்னராக வேடம் புனைந்தார், இது அவருக்கு சிறந்த நடிகருக்கான இரண்டாவது தேசிய விருதைப் பெற்றுத்தந்தது, மேலும் உலக அளவில் அவரது திறமையை அறியவைத்த முதல் படமாக இது திகழ்ந்தது. கான்ஸ் திரைப்பட விழாவில் போட்டியிடும் பிரிவில் இப்படம் தெரிவு செய்யப்பட்டு திரையிடப்பட்டது. அவரது நடிப்பு பல திறனாய்வாளர்களின் பாராட்டைப் பெற்றது.
2002 ஆம் ஆண்டில், மோகன்லால் அவரது முதல் பாலிவுட் படமான, கம்பெனி யில் நடித்தார், இப்படம் இந்தியாவில் பரவலாக பேசப்படும் ஹிந்தி மொழி ரசிகர்களிடம் அவரை அறிமுகப்படுத்தியது. இப்படம் வணிக ரீதியில் சிறப்பான வெற்றிப்படமாகத் திகழ்ந்தது. 2006 ஆம் ஆண்டில், இவர் நடித்த தன்மாத்ரா என்ற படத்தில், அல்செய்மர்ஸ் நோயால் (மறதி வியாதி) அவதியுறும் ஒரு பாத்திரத்தின் நடிப்பு அவருக்கு கேரள மாநிலத்தின் சிறந்த நடிகாருக்கான விருதைப் பெற்றுத்தந்தது. அவரது இரண்டாவது பாலிவுட் திரைப்படம் ராம் கோபால் வர்மா கி ஆக் , இப்படம் 1975 ஆம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப்படமான ஷோலே படத்தின் மறு தயாரிப்பாகும். மேலும் அதில் சஞ்சீவ் குமார் அவர்கள் நடித்த இன்ஸ்பெக்டர் வேடத்தில் தோன்றினார். பரதேசி என்ற படத்தில் வலியகத்து மூசா என்ற வேடத்தில் நடித்ததற்காக மோகன்லால் அவர்களுக்கு கேரள மாநிலத்தின் மிகச் சிறந்த நடிகருக்கான விருது 2007 ஆம் ஆண்டில் வழங்கப்பட்டது. தேசிய அளவில் பரதேசி என்ற படத்தில் அவருடைய நடிப்பிற்கு கிடைக்கவேண்டிய சிறந்த நடிகருக்கான விருதை மோகன்லால் அவர்கள் ஒரே ஒரு வோட்டு வித்தியாசத்தில் இழந்தார். 2009 ஆம் ஆண்டில் மோகன்லால் கமல் ஹாசனுடன்தமிழ் படமான உன்னைப்போல் ஒருவனில் நடித்தார். அவரது நடிப்பை தமிழ் ரசிகர்கள் மிகவும் போற்றினர்.
இதர இந்தியத் திரைப்பட நடிகர்களைப் போல மோகன்லால் அவர்களுக்கு திரைப்படத்திற்கு முந்தைய நாடக அனுபவம் இல்லை. இருந்தாலும் அவர் சில நாடகங்களில் நடித்துள்ளார். நியூ டெல்லியில்நேஷனல் தியேட்டர் பெஸ்டிவல் என்ற பெயரிலான தேசிய நாடக விழாவில் பங்குபெற்ற ஒரு நாடகமானகர்ணபாரம் என்ற சமஸ்க்ரித மொழி நாடகத்தில் அவர் கர்ணன். வேடத்தில் நாடகமேடையில் முதன்முதலாகத் தோன்றினர். இந்த நாடகம் குருக்ஷேத்திரத்தில் நடக்கவிருக்கும் போரின் முந்தைய நாள் அன்று, கர்ணனின் மனதில் காணப்படும் சஞ்சலத்தை, அவருடைய கடந்த கால நிகழ்வுகள் மற்றும் நம்பிக்கைகளைப் பற்றி அவர் நினைக்கும் பொழுது அவர் படும் மன உளைச்சலை சித்தரிப்பதாகும்.
கதையாட்டம் என்ற வகைப்பாட்டில் மோகன்லால் மலையாள காவியங்களில் இருந்து தெரிவு செய்த பத்து மறக்க முடியாத பாத்திரங்கள் மற்றும் நிகழ்ச்சிகளைச் சித்தரித்தார். அதை அவர் தமது தாய் மொழிக்கு சமர்ப்பணம் செய்வதாகக் குறிப்பிட்டார். திரைப்பட இயக்குனர் டி.கே. ராஜீவ்குமார் கற்பனையில் உதித்த இந்தக்காட்சியின் வடிவமைப்பு, மேடை நாடக நடிப்பு, திரைப்படத்திற்கான முகத்தோற்றம், ஒலி மற்றும் ஒளி அமைப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் இசை நயம் அனைத்தும் கொண்ட ஓர் அற்புத கலவையாகும். 'காளிதாசா விசுவல் மேஜிக்' என்ற பெயரில் மோகன்லால் மற்றும் அவருடன் புகழ் பெற்ற நடிகரான முகேஷும் இணைந்து உருவாக்கிய தயாரிப்பு நிறுவனம் தற்போது மிகவும் அண்மையில் சாயாமுகி என்ற நாடகத்தைத் தயாரித்தது. மோகன்லால் பீமன் வேடத்திலும் முகேஷ் கீசகன் வேடத்திலும் நடித்தார்கள்.


Next: மோகன்லால்- கதாபாத்திரங்கள் வழியாக

இயல்பான நடிப்பின் சூப்பர்ஸ்டார்



அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, ரஜினிகாந்த், மோகன்லால்- இவர்கள் அனைவருக்கும் சில ஒத்துமைகள் இருக்கின்றன. ஏறக்குறைய ஒரே காலகட்டத்தில் திரையுலகத்திற்குள் நுழைந்தவர்கள், தாங்கள் நடிக்கவந்த மொழிகளில் வில்லன்களாக அறிமுகம் ஆனவர்கள், தங்களது திறமையால் மட்டுமே வளர்ந்து வந்தவர்கள். நடிப்பில்  தங்களுக்கு என்று ஒரு புதியபாதையை வகுத்தவர்கள், வில்லன் வேடங்களில் மிகப்பெரும் வெற்றிபெற்று, நாயகர்களாக மாறியவர்கள், மக்களின் பேராதரவைப் பெற்று அந்தந்த மொழிகளில் உச்சத்தைத் தொட்டு சூப்பர்ஸ்டார் ஆனவர்கள்!
“என்னைப் பொறுத்தவரை இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர் மோகன்லால்தான்”- இது இந்தியாவின் சூப்பர்ஸ்டாரான அமிதாப் பச்சன் ஒரு முறை சொன்ன வார்த்தைகள்தான். இது அவர் தன்னுடைய நல்ல குணத்தாலும், பணிவாலும், மேடைமரியாதைக்காக சொன்ன வார்த்தைகள் அல்ல. உண்மையிலேயே நடிப்பின் அனைத்து அம்சங்களையும் அலசியபின் அவர் மனதில் எழுந்த அபிபிராயம்தான். இப்படி மற்ற சூப்பர்ஸ்டார்கள் போற்றும் அளவுக்கு மோகன்லாலின் நடிப்பிற்கு என்னதான் சிறப்பு என்று கேட்டால், அதற்கு ஒரே பதில்தான் இருக்கும். அதுதான் “இயல்பான நடிப்பு!“
இந்திய திரையுலகில் எல்லா நட்சத்திரங்களும் மேலும் மேலும் புகழ்பெறும் போது நடிப்பைப் பொறுத்தவரையில் ஒரு சிறிய வட்டத்திற்குள் சிக்கிக் கொள்வதுதான் வழக்கம். தங்களுக்கென்று ஒரு ரசிகர்வட்டத்தை உருவாக்கி, அந்த ரசிகர்களை திருப்திப்படுத்தவும், அவர்களின் ரசனையை வளரவிடாமல் தடுத்து, அதை தங்கள் நட்சத்திர அந்தஸ்தை தக்கவைத்துக் கொள்ளவும் தகுந்தபடி ஒரேமாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பார்கள்.
அவ்வப்போது தான் இதற்கு மாறான படங்கள் இதுபோன்ற நட்சத்திரங்களிடமிருந்து வெளிவரும். அதில் மிகவும் முக்கியமானவர்கள் மலையாளத் திரைப்பட சூப்பர்ஸ்டார்கள் தான். அதற்கு அங்குள்ள ரசிகர்களின் பார்வையும் காரணமாக இருக்கலாம். இருந்தாலும் அப்படியொரு நிலமை அங்கே ஆரம்பம் முதலே வழக்கமாக இருந்துவருவது சிறப்புதான்.
சத்யன், பிரேம் நசீர், மது போன்றவர்கள் உச்சநட்சத்திரங்களாக இருந்தபோது அவர்கள் வியாபாரரீதியான படங்களில் நடிக்கும்போது அதற்கு இணையாக கலைப்படங்களிலும் நடித்து வந்தனர். அதே பாதையைத்தான் மோகன்லால், மம்முட்டி, சுரேஷ்கோபி போன்றவர்களும் தொடர்ந்து வந்தார்கள்.
மற்ற மொழிகளில் கமலஹாசன் போன்றோர் இப்படி வித்தியாசமான படங்களை எடுக்க முயற்சிப்பதுண்டு. இந்தியில் அமீர்கான் போன்றவர்களும் இந்த பாதையை பின்பற்றி வருவது பாராட்டுக்குறிய விஷயம் தான்.
ஆனால் இந்த விஷயத்தில் மிகப்பெரும் வெற்றிபெற்றவர்கள் மோகன்லாலும் மம்முட்டியும் தான். இருவருமே பலமுறை தேசிய விருதுகளையும் மாநில விருதுகளையும் பெற்று கடந்த முப்பது வருடங்களுக்கு மேலாகவும் அந்த அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றனர் என்பது ஒரு அதிசயமான விஷயம்தான்.
இருவரும் ஒரேபோலத்தான் தொடர்ந்து வெற்றிபெற்று வருகிறார்கள் என்றாலும், படங்களைத் தேர்வுசெய்வதிலும், கதாபாத்திரங்களைத் தேர்வுசெய்வதிலும், இருவரும் வித்தியாசப்படுகின்றனர். அதிலும் மோகன்லால் பின்பற்றுவது தனக்கே உரித்தான ஒரு பாதைதான்.
ஆரம்பகாலகட்டத்தில் நிறையபடங்களில் நடிக்கவேண்டும் என்ற ஒரு லட்சியத்தைத் தவிர இவருக்கும் வேறு எந்த ஒரு எண்ணமும் இருந்ததில்லை. ஒரு வருடத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மஞ்சில் விரிஞ்ச பூக்கள் படத்தில் ஆரம்பித்த அவரது பயணம், பலபல சிறுசிறு பாத்திரங்களில் தொடங்கி வில்லன், குணச்சித்திரம், நல்லவன், கெட்டவன், ஆன்டி ஹீரோ என தொடர்ந்தது. மஞ்சில் விரிந்த பூக்களுக்கு பிறகு உண்மையில் அவருக்கு சொல்லும்படியாக கிடைத்த ஒரு நல்ல வேடம் பாலசந்திரமேனனின் கேள்க்காத்த சப்தம் என்ற படத்தில்தான். ஒரு வில்லன் வேடம். அதற்கு பிறகு அவர் திரும்பி பார்த்ததே இல்லை.
ஆரம்பத்தில் மற்ற நட்சத்திரங்களுடன், முக்கியமாக மம்முட்டியுடன் இணைந்து பல படங்களில் நடித்துவந்தார். இதற்கு மத்தியில் மோகன்லால் ஆன்டி ஹீரோவாகவும் அதைத்தொடர்ந்து ஹீரோவாகவும், பிறகு சூப்பர் ஸ்டாராகவும் வளர்ந்து விட மம்முட்டியுடன் நடிப்பதை தவிர்த்துவிட்டார். அத்துடன் படத்தின் வெற்றிக்கு தன்னுடைய பங்கை உணர்ந்து, அதற்கு தகுந்தபடி கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வுசெய்து நடிக்க ஆரம்பித்தார். அது மேலும் மேலும் அவருக்கு வெற்றியையும் புகழையும் கொடுத்தது.
இந்த வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் ஏற்கனவே சொன்னபடி இயற்கையாகவே கிடைத்த நடிப்புத்திறன்தான். எந்த ஒரு கதாபாத்திரத்தையும் தன்னுடைய இயல்பான நடிப்பால் மெருகேற்றிவிடவும், இயக்குநர்களே வியக்கும் அளவுக்கு அதை வெற்றி பெறச்செய்யவும் அவரால் முடிந்தது. இதற்கு உதாரணமாக பல படங்களைச் சொல்லலாம்.
மோகன்லால், அவர் நடிக்கும் படங்களை மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுக்கிறார், மேலும் அவர் நடிக்கும் பொழுது அவர் உள்ளுணர்வு சொல்வதை நம்பியே நடித்து வருகிறார் மற்றும் நிகழ்வுகளை அதன் போக்கில் விட்டு விடுவதையே அவர் விரும்புகிறார்.
மோகன்லால் ஒரு தன்னியல்புடன் கூடிய நடிகராக, ஒரு பாத்திரத்தின் உள்ளுணர்வுகள் மற்றும் மனக்குமுறல்களை எளிதாகவும் மிகவும் விரைவாகவும் வெளிப்படுத்தும் தன்மை கொண்டவராவார் பட இயக்குனரின் விருப்பத்திற்கிணங்கும் நம்பக்கூடிய முக பாவங்களை சித்தரிக்கக்கூடிய நடிகராக திரை உலகில் அறியப்படுகிறார். அவர் பிற மொழிப்படங்களில் நடிக்கும் பொழுது கொஞ்சம் மன உளைச்சலுடன் காணப்படுகிறார், அம்மொழிகளில் அவருக்கு முழுமையாக ஈடுபாடு இல்லாததாலும், மேலும் அதற்கான காரணம் அவருக்கு அந்தந்த மொழிகளில் காணப்படும் சிக்கல்களை அவர் அறியாதிருப்பதே என்பதை உணர்ந்துள்ளார்.
இவருடைய நடிப்பின் அடிப்படையில் இவர் நடித்த கதாபாத்திரங்களையும் படங்களையும் நான்கு பிரிவுகளாக பட்டியலிடலாம். முதலாவது, இயக்குநர்களின் படைப்புகளாக மட்டும் உள்ள வித்தியாசமான கதாபாத்திரங்கள் மற்றும் படங்கள். இந்த பிரிவில் பாசிலின் படங்களில் ஆரம்பித்து (உதாரணத்திற்கு மணிச்சித்திரத்தாழ் போன்ற படங்கள்), பரதன் (காற்றத்தே கிளிக்கூடு, தாழ்வாரம்), பத்மராஜன் (தூவானத்தும்பிகள், நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்), ஷாஜி (வானப்பிரஸ்தம்) போன்று பல இயக்குநர்களின் கதாபாத்திரங்களை திரையில் வாழவைத்தார்.
இரண்டாவது, சாதாரணவாழ்வில் நாம் கண்டுவரும் இயல்பான மனிதர்களை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்கள். முக்கியமாக இதுபோன்ற கதாபாத்திரங்கள் தான் மோகன்லாலின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம். இதுபோன்ற கதாபாத்திரங்கள் கொண்ட கதைகள் மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றன. இதற்கு உதாரணமாக சத்தியன் அந்திக்காடு இயக்கிய நாடோடிக்காற்று, காந்திநகர் 2வது தெரு, லோகிததாஸ்- சிபி மலையில் கூட்டணியில் வந்த கிரீடம், ஹிஸ் ஹைனஸ் அப்துல்லா, கமலதளம், பிரியதர்ஷன் இயக்கிய சித்ரம், தாளவட்டம், கிலுக்கம் போன்ற படங்களைக் கூறலாம்.
மூன்றாவது, மோகன்லாலின் நட்சத்திர அந்தஸ்தையும், அவர்மீது ரசிகர்கள் வைத்திருந்த அன்பையும் வியாபாரம் செய்து பணம் பண்ண, அல்லது அவருடைய நட்சத்திர அந்தஸ்தை வளர்ப்பதற்காக, அவருடைய நடிப்பையும் நடை உடை பாவனைகளையும் பின்பற்றியே வந்த வியாபாரப்படங்கள். இந்த படங்களில் பல கதாபாத்திரங்களும் கலைநயத்துடனும் இயல்பான குணங்களும் கொண்டவையும் தான். அதுவே அந்த படங்களில் பெருவாரியாக வெற்றிபெறச்செய்தது.
நான்காவது, இதுபோன்ற எந்த ஒரு நல்ல லட்சியமும் இல்லாமல் பணத்திற்காகவும், நண்பர்களுக்காகவும், சில நேரங்களில் மக்களுக்கு பிடிக்கும் என்று தவறாக எண்ணியும் எடுக்கப்பட்ட சில படங்கள். அவற்றைப்பற்றி இங்கு பட்டியலிடத் தேவையில்லை. ஆனால் மோகன்லாலும் இதுபோன்ற படங்களில் நடித்திருக்கிறார் என்பதை மறக்கக் கூடாது. வளர்ந்து வரும் நடிகர்கள், அவரை பின்பற்ற நினைக்கும் போது, அவர் செய்த இதுபோன்ற தவறுகளையும் கணக்கில் கொண்டு, அதுபோன்ற தவறுகள் தங்களுக்கு நேராமல் இருக்க முயற்சிக்கலாம்.
எந்த ஒரு கதாபாத்திரமானாலும், அது பெரிய இயக்குநர் இயக்கும் படமாக இருந்து, புகழ் கிடைக்கும் என்று கண்டிப்பாக தெரிந்தாலும், அல்லது பேருக்கு இன்னொன்று என்ற எண்ணத்தில் ஏஆதோ காரணத்திற்காக ஒப்புக் கொண்டு நடித்த படத்தின் கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, நடிப்பில் மோகன்லாலின் முத்திரை கண்டிப்பாக வெளிப்படும். கதாபாத்திரத்திற்கு ஏற்றதுபோல, மட்டுமல்ல, ஒரே படத்தில் ஒரு கதாபாத்திரம் வரும் வெவ்வேறு காட்சிகளில்கூட அந்த காட்சிகளின் இயல்புக்கு ஏற்றபடி அவருடைய நடிப்பு வித்தியாப்படும். அந்த மாற்றம்கூட இயல்பாகவே பார்வையாளருக்குத் தெரியும்.
நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கும்போது, பிரபலமான எந்த ஒரு காமடி நடிகரையும் விட இயல்பாக காமடி செய்யும் மோகன்லால், அதற்கடுத்து ஒரு மாஸ் ஹரோ படத்தில் கற்பனைக்கும் அதீதமான பலம்வாய்ந்த ஒரு மனிதனாக எல்லா வில்லன்களையும் தோற்கடிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது ரசிகர்களின் விசில் சத்தம் காதைப்பிளக்கவைக்கும் அளவுக்கு நடித்து வெற்றிபெறுகிறார். சோகக் காட்சிகளில் நடிக்கும் போது, வாய்விட்டு அழாமலே, கண்ணில் நிறைந்து ததும்பும் கண்ணீராலும். முகபாவனைகளாலும் மட்டுமே பார்வையாளர்களை அழவைப்பதில் இவருக்கு நிகர் இவரேதான்.