Thursday 30 June 2016

தமிழ் படங்கள் மே-ஜூன் 2016


சென்னை புத்தக கண்காட்சி காரணமாக கட்நதமாதம் நமது சங்கமம் நடத்த முடியாமல் போனதால் தற்பொழுது இரண்டு மாதங்களுக்கும் சேர்த்து ஒரே சங்கமமாக நடத்தப்பட இருக்கிறது. இந்த இரண்டு மாத காலையளவில் தமிழில் 25ற்கும் மேலான படங்கள் வெளியாகியிருக்கின்றன. அவற்றிலிருந்து சட்டென குறிப்பிடும்படியாக, பெருவெற்றிபெற்ற படங்களோ, அல்லது பரவலாக பேசப்பட்ட படங்களோ இல்லை என்பது உண்மைதான்.
இதை கவனிக்கும் பொழுது தொடர்ந்து இதேபோல இரண்டுமாதங்களுக்கு ஒருமுறை அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சங்கமத்தை நடத்துவதுதான் நல்லது என்றே தோன்றுகிறது. இது தமிழ் படங்களை பொருத்தவரையில் வருத்தப்படவேண்டிய ஒரு விஷயம்தான்!
இருப்பினும் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் லட்சியத்திற்கு ஏற்றபடி இந்த மாதங்களில் வெளிவந்த படங்களில் இருந்து, மனதை கவர்ந்த படங்களாக, பாராட்டப்படவேண்டியவை என்று கருதிய நான்கு படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.


உறியடி

இந்த சங்கமத்திற்காக எந்தெந்த படங்களை தேர்வு செய்வது என்று கேட்டபோது பல நண்பர்களும் பரிந்துரைத்தது இந்த பெயரைத்தான். அதுவே இந்த படத்திற்கான முதல் வெற்றிதான். இந்த படத்தின் இயக்குனர் ஒரு புதுமுகம். இந்த படத்தின் தயாரிப்பாளரும் இவர்தான். புதியதாக ஒரு படத்தை தயாரித்து இயக்க முன்வருபவர் வழக்கமாக அதிகமான ரிஸ்க்எடுக்காமல் ஒரு காதல் கதையையோ அல்லது பேய்கதையையோ தான் எடுப்பார். ஆனால் இவர் சமூகத்தில் நிகழ்ந்துவரும் ஒரு பிரச்சினையை மையமாகவைத்து, எந்த சமரசவுமின்றி ஒரு படத்தை எடுத்திருக்கிறார். அதற்காகவே இவரை பாராட்டவேண்டும்.


ஒரு நாள் கூத்து

இந்த மே-ஜூன் மாத காலகட்டத்தில் வெளிவந்த ஒரு பெரிய படம் இறைவி’. மூன்று வெவ்வேறு பெண்களின் வாழ்க்கையைப் பற்றியதுதான் அதன் கதை. இந்த ஒரு நாள் கூத்தும் இதே போல மூன்று பெண்களின் வாழ்க்கையை சொல்வதாகத்தான் இருக்கிறது. சில நண்பர்கள் இறைவிபற்றி பேச சொன்னார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அதைவிட ஒரு நாள் கூத்தைதேர்ந்தெடுப்பதுதான் நல்லது என தோன்றியது. ஒரு ஜேணரில் ஒரு படம் போதும் என்பதாலும் இந்த படம் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது.


அம்மா கணக்கு

இந்த படம் ஹிந்தியில் வெளியாகி பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. நல்ல பெயரும் கிடைத்திருக்கிறது. ஆனால் இங்கு இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற்றிருக்கிறதா, தரத்தில் அதே அளவுக்கு இருக்கிறதா என்று கேட்டால் பதில் அனேகமாக இல்லையென்றே வரும். ஒரே கதை, ஒரே நேரத்தில், இரு மொழிகளில் எடுக்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்களைப்பற்றி அலசுவதற்கு இந்த படம் நல்லதொரு உதாரணம். அதுவுமின்றி இந்த படத்தில் சொல்ல வந்த கருத்தும் இதை தேர்வுசெய்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.


ராஜா மந்திரி

கடந்த பல வருடங்களாக பெண் இயக்குநர் என்றாலே அவர் பெண்ணீயம் பேசுகின்ற படம் அல்லது விருதை குறிவைத்து எடுக்கும் படம் மட்டுமே எடுப்பார் என்ற எண்ணம் பரவலாகவே இருக்கிறது. அந்த எண்ணத்தை உடைக்கும் விதமாக இந்த படத்தின் இயக்குநர் முற்றிலும் பொழுதுபோக்கை முன் நிறுத்தி, அதே நேரம் விரசமில்லாமல், முடிந்தவரை இயல்பாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். காளி வெங்கட்என்ற நடிகனை இந்த படம் அடுத்தகட்டத்திற்கு உயர்த்தியிருக்கிறது.
   
இந்த படங்களைப்பற்றிய விரிவான விமர்சனங்களும், பாராட்டுக்களும், நண்பர்களின் கேள்விகளும் அவற்றிற்கான படைப்பாளிகளின் பதில்களும் சங்கமத்தில் இடம்பெற இருக்கின்றன.

இந்த சங்கமத்தில் பேசுவதற்காக தேர்ந்தெடுப்பதே அந்த படங்களுக்கான ஒரு அங்கீகாரம்தான். அந்த வகையில் இந்தபடங்கள் பற்றி நமது சங்கமத்தில் பேசப்படும் விமர்சனங்கள்கூட பாராட்டுக்களாகவே இருக்கும்.

Monday 27 June 2016

FLC may-June 2016




Film Literature Confluence – May & June 2016

Date:                    3-7-2016, Sunday
Time:          5 PM to 8 PM
Venue:        Discovery Book Palace
                    Mahaveer Complex, 6 Munusamy Road
                    K.K.Nagar West, Chennai.
Topic:         Movies of This Month
          (Uriyadi, Oru Naal Koothu, Amma kanakku and Raja Manthiri )

The Directors & Writers of the films and Literary Friends will be participated.
All are welcome

With love,

Vijayan B (Kamalabala)






திரைப்பட இலக்கியச் சங்கமம்மே & ஜூன் 2016

நாள்: 3-7-2016 ஞாயிற்றுக்கிழமை 
நேரம்: மாலை 5 மணி முதல் 8 மணி வரை

இடம்: டிஸ்கவரி புக் பேலஸ்,
மஹாவீர் காம்ப்ளக்ஸ், 6 முனுசாமி சாலை,
கே.கே.நகர் மேற்கு, சென்னை.
தலைப்பு: இந்த மாதப் படங்கள்
              (உறியடி, ஒரு நாள் கூத்து, அம்மா கணக்கு மற்றும் ராஜா மந்திரி)

இப்படங்களின் இயக்குனர்கள், எழுதாளர்கள் மற்றும் இலக்கிய நண்பர்கள் பங்கேற்க உள்ளனர்.
அனைவரும் வருக..

அன்புடன்

விஜயன். பா (கமலபாலா)

Wednesday 1 June 2016

ஒரு எழுத்தாளனின் வருத்தம்




நண்பர்களே,
சென்னையில் 39வது புத்தகக் கண்காட்சி இன்று (1-6-16) இனிதே துவங்குகிறது. இதில் பங்குபெறும் பதிப்பகத்தாரர்களுக்கும், புத்தகங்களை படைத்த எழுத்தாளர்களுக்கும், அதைக் கண்டு, வாங்கி, படித்து ரசிக்க வரும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கடந்த ஜனவரியில் நடக்க வேண்டிய விழா இது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அந்த நேரத்திலேயே வெளிவரும் விதமாக நானும் நான்கு புத்தகங்களை எழுதியிருந்தேன். நான்குமே மொழி பெயர்ப்பு நூல்கள்தான்! (பஷீர் – வாழ்க்கை வரலாறு, கேரளத்தில் ஒரு ஆப்ரிக்கா, கலீல் ஜிப்ரான் கதைகள், பத்மராஜனின் இரண்டு திரைக்கதைகள்)
இந்த நான்கு புத்தகங்களும் டிஸ்கவரி புக் பேலஸ் மூலமாக வெளியிட தீர்மானிக்கப்பட்டு அதற்கான வேலைகள் துரிதமாக நடந்துவந்தன. எழுத்தாளன் என்ற முறையில் என்னுடைய பணிகளை முடித்து கடந்த ஆகஸ்டு மாதமே நான்கு புத்தகங்களையும் ஒரு முறை பிழைதிருத்தி கொடுக்கப்பட்டு விட்டன.
சென்னை மழை வெளத்தால் கண்காட்சி தள்ளிவைக்கப்பட்டபோது, இந்த புத்தகங்களை வெளியிடும் பணிகளும் தள்ளிவைக்கப்பட்டதாக நண்பர் வேடியப்பன் தெரிவித்திருந்தார்.
தற்பொழுது புத்தக கண்காட்சி துவங்கிவிட்டன. இதில் என்னுடைய எத்தனை புத்தகங்கள் வெளியிடப்படுகின்றன, அல்லது வருகிறதா என்பது கூட எனக்கு தெளிவாக தெரியவில்லை. எல்லாம் அந்த வேடியப்பனுக்கே வெளிச்சம்!
இந்த நான்கு நூல்களும் வெளியிடத்தயாராக உள்ளது என்று கடந்த வருடம் ஒரு முறை அவர் முகநூலில் பதிவிட்டார். அது என்னை சமாதானம் செய்வதற்காகத்தான் என்று தெரிகிறது. தற்பொழுது அந்த புத்தகங்களின் வெளியீடு எந்த நிலையில் இருக்கிறது என்றுகூட தெரியவில்லை. நானும் அதைப்பற்றி அதிகமாக வற்புறுத்தி கேட்கவுமில்லை.
ஆனால் புத்தக கண்காட்சி அருகில் வர வர, கடந்த வாரத்தில் சில இலக்கிய விழாக்களுக்கு செல்லும்போது, பல நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் விசாரித்து வந்தனர். இப்போதும் விசாரிக்கின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.
ஒரு புதிய எழுத்தாளர் இந்த தமிழ் சூழலில் எதிர்கொள்ள வேண்டிய பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றுதான் என எனக்கு புரிகிறது. இருந்தாலும் நண்பர்கள் கேள்விகேட்கும் பொழுது, பதில் சொல்ல முடியவில்லை என்பதால் மனம் மிகவும் வருந்தத்தான் செய்கிறது.
அதனாலேயே நான் தற்பொழுது ஒரு முடிவுக்கு வந்து விட்டேன். இன்று ஆரம்பமாகும் புத்தக கண்காட்சிக்கு ஒரு வாரம் வரக்கூடாது என்று! கரணம் அங்கு வரும் நண்பர்கள் கண்டிப்பாக இதே கேள்வியை கேட்பார்கள். அதை தவிர்க்க இது ஒன்று தான் வழி. அதற்காக நான் இன்று கோயமுத்தூருக்கு செல்கிறேன். அடுத்த வாரம் புதன் கிழமை (8-6-16) அன்று திரும்பி வர திட்டமிட்டுள்ளேன். அதற்குள் என்னுடைய புத்தகங்களும் வெளிவந்து விடும் என்று நம்புகிறேன். அப்படி வந்துவிட்டால், 8ம் தேதி முதல் நண்பர்களை சந்திக்கிறேன். இல்லையேல், மீண்டும் ஒரு வாரம் வேறு பணிகளில் நேரத்தை செலுத்த வேண்டியதுதான். கண்காட்சி முடிந்த பின் சந்திக்கலாம்.

என் மீது கொண்ட அக்கரையினால் இதைப்பற்றி தொடர்ந்து விசாரித்து வரும் நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி!