Saturday 27 April 2013

திரைப்பட இலக்கியச் சங்கமம் – ஒரு அறிமுகம்


திரைப்பட இலக்கியச் சங்கமம் ஒரு அறிமுகம்

திரையுலகிலும் அதைச்சார்ந்த தொழில்களிலும் லட்சக்கணக்கானவர்கள் வாழ்ந்து வருகின்றனர். திரைப்படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் என்று ஆரம்பித்து சினிமா தியேட்டர் ஆப்ரேட்டர்கள், தியேட்டரில் டிக்கட் கிழிப்பவர்கள் வரையிலும் இதில் அடங்குவர்.
       இவர்கள் எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்றால் திரையுலகம் ஆரோக்கியமாக இருக்கவேண்டும். திரையுலகம் ஆரோக்கியமாக இருக்க, நிறைய திரைப்;படங்கள் வெளி வரவும்வேண்டும், அவை வெற்றி பெறவும் வேண்டும்.
 'இதுபோன்ற' திரைப்படங்கள்தான் வெற்றிபெறும் என்று யாராலும் சொல்ல முடிவதில்லை. அப்படி சொல்ல முடிந்திருந்தால் எல்லோரும் அதே போன்ற திரைப்படங்களை மட்டும் எடுத்து வெற்றி பெற்றிருப்பார்கள். படைப்பாளிகளின் கற்பனைக்கும் திறமைக்கும் சவால்விடுவதும், இத்துறையில் புது ரத்தத்தை ஓடவைப்பதும் யாருக்கும் தொpயாத 'அந்த' ரகசியம்தான்.
ஆனால் ஒரு உண்மை எல்லோருக்கும் தெரியும். அது 'நல்ல திரைப்படங்கள் என்றுமே தோல்வியடைந்ததில்லை' என்பதுதான்! விருதுகள் வாங்குவதற்காகவே தயாரிக்கப்பட்ட 'கலைப்படம்' என்று போற்றப்படும் படங்கள் மட்டுமல்ல, வெகு ஜனங்களை மகிழ்விக்கும் தரமான ஜனரஞ்சகப்படங்களையும் சேர்த்துதான் நல்ல திரைப்படங்கள் என்று இங்கு குறிப்பிடுறேன்.
அந்த வகையில் நிறைய நல்ல திரைப்படங்கள் உருவாக அடிப்படைத் தேவை நல்ல கதைகள்தான்! இதை அனைவரும் ஒப்புக்கொள்வார்கள். புதுமையான கதை, பழையதை புதுவிதமாக சொன்ன கதை, பிறமொழி படங்களிலிருந்து தழுவப்பட்ட அல்லது தூண்டப்பட்ட கதைகள் என்று பல வகையிலும் நல்ல கதைகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. புதுமையாக, சுயமாக சிந்தித்து உருவாக்கிய கதை என்று பகிரங்கமாக விளம்பரம் செய்து கொண்டே பிறமொழிகளிலிருந்து 'நகல்' எடுத்த கதைகளும் வெற்றி பெறுவது உண்டு.
ஆனால் நல்ல திரைக்கதைகளும், அதுவழி நல்ல படங்களும் உருவாக சிறந்த வழி இலக்கியங்களின் துணைகொண்டு திரைக்கதைகளை அமைப்பது தான். இதன் பொருள் இலக்கியங்களை, குறிப்பாக நாவல்களை மட்டுமே திரைப்படமாக எடுக்கவேண்டும் என்பது அல்ல. நல்ல இலக்கியங்களைப் படித்தால், தொடர்ந்து இலக்கியங்களுடன் தொடர்பு வைத்தால் அதன் தாக்கம் முழு திரைக்கதை அமைக்கும் போது மட்டுமல்ல, நல்ல கதாபாத்திரங்கள்,  தேர்ந்தெடுத்த காட்சிகள், குறிப்பிட்ட வசனங்கள் படைப்பதற்கு கூட உதவியாக இருக்கும். அனுபவம் வாய்ந்த பல பிரபல படைப்பாளிகளும் இதை உணர்ந்து செயலாற்றியிருக்கின்றனர். இன்றும் செயலாற்றி வருகின்றனர்!
இலக்கியங்களுடன் உள்ள தொடர்பை பலப்படுத்த இலக்கியவாதிகளுடன் தொடர்பு கொள்ளுவது மிகவும் நல்லது. திரைப்படங்களை குற்றம் சொல்லும் சில இலக்கியவாதிகள் குறை சொல்வதை விட்டுவிட்டு திரைப்பட படைப்பாளிகளுடன் இணைந்து தங்கள் கருத்துக்களை பரிமாற ஆரம்பித்தால் இலக்கியவாதிகளுக்கும் திரைப்பட கலைஞர்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளி இல்லாமல் போகும். நல்ல கதைகள் உருவாக உதவியாக இருக்கும்.
ஆனால் ஒரு கதையை திரைப்படமாக உருவாக்க இயக்குநரும் எழுத்தாளரும் மட்டும் உழைத்தால் முடியாது. தயாரிப்பாளர், நடிகர்கள் முதல் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர் போன்ற தொழில்நுட்பக் கலைஞர்களும், தயாரிப்பு நிர்வாகிகள், பத்திரிக்கைத் தொடர்பாளர்கள் போன்ற பலரும் இணைந்து பணியாற்றினால் தான் திரைப்படம் உருவாகும்.      
இவர்கள் அனைவருடைய வாழ்விலும் ஒவ்வொரு படத்தின் வெற்றியும் தோல்வியும் தாக்கத்தை ஏற்படுத்துவதுண்டு. அதனாலேயே படங்கள் வெற்றிபெறவேண்டும் என்று இவர்கள் அனைவரும் ஆசைப்படுவதும், அவற்றின் கதையிலும் தொழில்நுட்பத்திலும் அக்கறை கொள்வதும் நியாயம் தான். அவர்களுடைய எண்ணங்களும் அபிப்ராயங்களும் தெரிந்து கொண்டால் படங்களில் வரும் குறைகளை களையவும் நிறைகளை வளர்க்கவும் ஏராளமான வாய்ப்புகள்  கிடைக்கும்.
ஆனால் வேலை செய்யும் பொழுதும் அல்லது தொழிற்சங்க கூட்டங்களிலும் அல்லாமல் இவர்கள் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பு யாருக்கும் கிடைப்பதில்லை. அதனால் திரைப்படங்களைப்பற்றி திரைத்துறையில் இருப்பவர்களே என்ன நினைக்கிறார்கள் என்று படைப்பாளிகளுக்கு தெரியவும் வாய்ப்பில்லாமல் போகிறது. இந்தக்குறையை தீர்க்கவேண்டுமென்றால் திரைத்துறையினர் அவ்வப்போது ஒன்று கூடவும், மனம்விட்டு பேசவும், மற்றவர்கள் பேசுவதை கேட்கவும் வாய்ப்பு கிட்டவேண்டும். அதற்கு திரைத்துறையினருக்கு மத்தியில் ஒரு நட்பு வட்டம் வளரவேண்டும்.
முன்பு பலபடங்கள் வெற்றிபெற்று நூறாவது நாள் விழா, வௌ;ளிவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. அந்நேரங்களில் திரைத்துறையினர் இதுபோல சந்தித்து வந்தனர். ஆனால் காலப்போக்கில் பலமாற்றங்கள் வர, இப்போது நூறாவது நாள் விழா, வௌ;ளிவிழா போன்றவை மிக அரிதாகிவிட்டன.  திரைப்படங் களுக்கான புஜையும், பாடல்கள் வெளியீட்டு விழாவும் மட்டும்தான் தற்பொழுது நடந்து வருகிறது. புஜைபோடும்போது அந்த  திரைப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் அந்த படத்தின் ஆரம்ப கட்டத்தில் பணியாற்றும் கலைஞர்களும், அவர்களுக்கு  மிகநெருக்க மானவர்களும் விருந்தினர்களும் மட்டுமே பங்கு பெறுவதுதான் வழக்கம்.
பாடல்கள் வெளியீடு இன்றைய காலகட்டத்தில் அனேகமாக திரையரங்குகளில் மட்டுமே நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சிகள் வழக்கம் போல தாமதாகவே ஆரம்பிக்கும். அதற்குள் திரையரங்கில் காலைக்காட்சி ஆரம்பிக்க நேரமாகிவிடும். அதனாலேயே அவசரமாக நிகழ்ச்சிகளை நடத்தி முடித்து விடுவார்கள். அதற்குள் திரையரங்க ஊழியர்கள் 'பணிவுடன்' அனைவரையும் அங்கிருந்து துரத்த ஆரம்பித்து விடுவார்கள். பிறகு எப்படி மற்ற படங்களைப்பற்றியும், மற்ற  விஷயங்களைப்பற்றியும் பேசுவது?
நானும் உதவி இயக்குநராக கனவுகளுடன் வந்த நாளிலிருந்து  திரைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆசைப்படுவதுண்டு. எல்லோரையும் போலவே நானும் இலக்கிய கூட்டங்களிலும், திரைவிழாக்களிலும் இத்துறைகளில் வெற்றிபெற்றவர்களை பார்க்கவும் அவர்கள் பேசுவதைக் கேட்கவும் ஆர்வம் கொண்டிருக்கிறேன்.
ஆனால் வருடங்கள் கடந்து செல்ல, இதுபோன்ற விழாக்கள் குறைந்து விட்டதினால் இப்படி தொடர்ந்து நிகழ்ச்சிகளில் பங்குபெறவோ, வெற்றி பெற்றவர்களின் பேச்சைக் கேட்கவோ முடியாமல் போனது. இது என் மனதில் ஒரு ஆதங்கமாகவே வளர்ந்து வந்தது. இதை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதுபற்றி நான் எனக்கு தெரிந்த பலரிடமும் கேட்டுப்பார்த்தேன். யாராவது இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தினால் அனைவருக்கும் உதவியாக இருக்கும் என்று சொல்லிப் பார்த்தேன். ஆனால் யாரும் இதை பொpதாக எடுத்துக் கொள்ளாததால், நானே ஒரு முடிவை எடுத்தேன். அதன் பலன் தான் இந்த சங்கமம்!
தற்பொழுது இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்தை ஒம்பது முறை  நடத்தி விட்டேன். அதில் வெற்றியும் கண்டேன். ஆனால் என்னைப் பொறுத்த வரையில் இதன் முழுவெற்றி என்பது மேடையில் சிறப்பு விருந்தினர்கள் வருவது மட்டுமல்ல (அதுவும் வெற்றியின் ஒரு பகுதிதான் என்றாலும்) இந்த சங்கமத்திற்கு பார்வையாளர்களாக நிறையபேர் வந்து கூடுவதுதான்! குறிப்பாக வெற்றிபெற்றவர்கள் கூடுவதுதான் சங்கமத்தின் உண்மையான வெற்றியாகும்.
அதனால்தான் சிறப்பு விருந்தினர்களாக மட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களாகவும் அனைத்து திரைத் துறையினரும் இந்த திரைப்பட இலக்கியச் சங்கமத்திற்கு வர வேண்டும் என்று நான் பணிவுடன் அழைக்கிறேன்.
திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று உண்மையிலேயே விரும்புபவர்கள் இதில் கலந்து கொண்டால், அவர்களே வருகிறார்களே, அப்படியென்றால் நாமும் வருவோம் என்று மற்றவர்களும் வர ஆரம்பிப்பார்கள். இந்த சங்கமத்தின் நோக்கமும் நிறைவேறும்.
இந்த சந்திப்பினால் எனக்கு என்ன நஷ்டம், லாபம் என்று யோசிக்காதீர்கள். உங்களுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று யோசியுங்கள். திரைப்படம் மற்றும் இலக்கிய உலக நண்பர்கள் அனைவரும் மாதம் ஒருமுறையாவது சந்தித்தால் அவர்களுக்கு மத்தியில் ஒரு புரிதல் உருவாகும், உறவு பலப்படும்.
இதுவரை நல்ல சினிமாக்கள் உருவான வழி தெரியும், இனிமேல் நல்ல சினிமாக்கள் உருவாக்க மனதில் தெளிவு பிறக்கும். உங்களுக்காக நீங்கள் வந்தால், இந்த சங்கமத்தில் இணைந்தால் அதுவே எனக்கு திருப்தி தரும். உங்கள் மூலமாக எனக்கும் புதிய தொடர்புகள் கிடைக்கும். அதுவே எனக்கு லாபம்.
உங்கள் உதவி இதைத் தொடர்ந்து நடத், இதுபோன்ற நல்ல முயற்சிகள் மேலும் தொடர தூண்டுதலாக இருக்கும். அதுதான் இதன் இலக்கு. அதனால் திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள், நல்ல படங்கள் வரவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் - படைப்பாளிகள் மட்டுமல்ல நடிகர்கள், மற்ற கலைஞர்கள், ரசிகர்கள்- என்று அனைவரும் வர வேண்டும்.   

No comments:

Post a Comment

Let others know your opinions about this post