Monday 1 February 2016

முதல் நிகழ்வும் மனநெகிழ்வும்



என்னதான் முயன்றாலும் வழக்கமான ஒரு இலக்கிய நிகழ்வு போலவே குறிப்பிட்ட நேரத்திற்கும் சற்று தாமதமாகத்தான் நிகழ்ச்சியை ஆரம்பிக்க முடிந்தது. (வரும் மாதத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று தெளிவாக இருக்கிறேன்.)

அதே போல எதிர்பார்த்த நண்பர்கள் நிறைய பேர் வரவில்லை. (அதற்கு பதிலாக நிறைய புது நண்பர்கள் வந்து சிறப்பித்தனர்.) இவற்றை நினைத்து சிறு வருத்தத்துடன் நிகழ்ச்சியை ஆரம்பித்தாலும், முடிக்கும் போது மனதிற்கு நெகிழ்வாகவே இருந்தது!

ஜனவரி மாதம் வெளியான 15 படங்களிலிருந்து (29-ம் தேதி வெளியான படங்களைத் தவிர்த்து) அழகு குட்டிச் செல்லம், தாரை தப்பட்டை, ரஜினி முருகன், கதகளி என நான்கு படங்களைப்பற்றி மட்டுமே பேசுவதென்று முடிவெடுத்திருந்த்தால் அந்த படங்களை தேர்ந்தெடுத்ததுப்பற்றி கூறி நான் நிகழ்ச்சியை துவங்கி வைத்தேன். நண்பர் திரு கேபிள் சங்கர் இந்த நான்கு படங்களைப்பற்றி பாராட்டவேண்டிய விஷயங்களை பாராட்டியும், விமர்சிக்க வேண்டிய விஷயங்களை விமர்சித்தும் நல்லதொரு உரையை ஆற்றினார்.

பிறகு திரு அழகு குட்டிச் செல்லம் படத்தின் இயக்குனர் திரு சார்லஸ் அந்த படத்தைப்பற்றிய பாராட்டுதல்களுக்கு நன்றியும், விமர்சனங்களுக்கு பதில்களையும் எடுத்துரைத்தார்.

தொடர்ந்து நடந்த கலந்துரையாடலில் பார்வையாளர்கள் எழப்பிய படங்களின் கரு, வெற்றி, வியாபாரம் போன்ற பலவிதமான கேள்விகளுக்கு திரு கேபிள் சங்கரும்,  திரு சார்லசும் பதில் அளிக்க, இது ஒரு ஆக்கப்பூர்வமான கலந்துரையாடலாகவே அமைந்தது. இதை நடத்திய எனக்கு இந்த வெற்றியால் மட்டற்ற மகிழ்ச்சி.

இந்நிகழ்வின் மிகப்பெரும் சிறப்பாக நான் நினைப்பது அழகு குட்டிச் செல்லம் பற்றி நடந்த உரையும் கலந்துரையாடலும்தான். புதியதாக படம் வெளிவரும் சமயங்களில் தொலைக்காட்சிகளில் அப்படங்கள் பற்றி நடக்கும் விளம்பர நிகழ்ச்சிகளிலிருந்து இந்த சந்திப்பு மிகவும் மாறுபடுகிறது. ஒரு மாதம் வெளிவந்த படங்களில், ஒரு நல்ல படத்தை, அதுவும் ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்படாமல் போன, ஆனால் வெற்றிபெற்றிருக்கவேண்டிய ஒரு சின்ன பட்ஜெட் படத்தைப்பற்றிய கலந்துரையாடலாக இது அமைந்தது.

இந்த சங்கமம், படம் வெளியான நேரத்தில் பார்க்காத ரசிகர்கள் ஐம்பது பேரையாவது (குறைந்தபட்சம்) “இப்படத்தை பார்க்க வேண்டும்என்று நினைக்கத் தூண்டியிருக்கிறது. அதுவே இதன் பெரும் வெற்றியாக நான் கருதுகிறேன்.

இந்த பாணியில் இச்சங்கமத்தை நடதுதுவது இதுவே முதல் முறை. இந்த முதல்படி வெற்றிப்படியாக அமைந்து, அடுத்து வரும் மாதங்களில் தொடர்ந்து நடத்தி, இந்நிகழ்வை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துவதற்கான உற்சாகத்தை தருகிறது. இதற்காக கேபிள் சங்கருக்கும், சார்லசுக்கும் நன்றி.

இதை நடத்த உதவியாகவும் உறுதுணையாகவும் இருந்த நண்பர்களுக்கும், வந்து சிறப்பித்த நண்பர்களுக்கும், இதை பதிவு செய்யவந்த தந்தி டிவி குழுவினருக்கும், மற்ற வலைதள குழுவினருக்கும் நன்றிகள்!

No comments:

Post a Comment

Let others know your opinions about this post