Thursday 17 November 2016

காணிக்கை




காணிக்கை

ஒரு சாதாரண இணை இயக்குநரான நான் திரைப்பட இலக்கியச் சங்கமம் என்ற ஒரு நிகழ்வை ஆரம்பித்து, தொடர்ந்து ஐந்து வருடங்களுக்கும் மேலாக, வெற்றிகரமாக நடத்தி வருகிறேன் என்றால் இந்த வெற்றிக்கு காரணம் என்னுடைய உழைப்பு மட்டுமல்ல. பலருடைய உதவியும், ஊக்கமும், ஒத்துழைப்பும்தான்!
திரைப்பட இலக்கியச் சங்கமம்தான் இந்த நூலுக்கு அடிப்படையான பல கருத்துக்களை எனக்கு கற்றத்தந்தது. இந்த நிகழ்வை நடத்துவதற்காக நான் சந்தித்த விருந்தினர்கள் மற்றும் கலந்துகொண்ட நண்பர்கள் அனைவருமே பல விஷயங்களில் எனக்கு வழிகாட்டிகளாக இருந்திருக்கின்றனர்.
இதுவரை நடந்த சங்கமங்களில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், நண்பர்கள் அனைவரும் எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் என் முயற்சியை ஊக்கப்படுத்துவதற்காகவே வந்தார்கள். அவர்களுக்கு சிலநேரங்களில் டீ கூட கொடுக்க என்னால் முடிந்ததில்லை. இருந்தாலும் அவர்கள் என்மீது காட்டிய அன்பிற்கு இணையே கிடையாது. அந்த அன்பும் பாராட்டும்தான் என்னுடைய அடுத்தகட்ட முயற்சிகளுக்கு ஊக்கம் தந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
இவர்களில் மறைந்த இயக்குநர் திரு பாலுமகேந்திரா அவர்களுடைய உதவியை குறிப்பிட்டு சொல்லாமல் இருக்க முடியாது. திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் சிறப்பு விருந்தினர் இவர்தான். வழக்கமாக எந்த ஒரு சிறப்பு விருந்தினரும் விழா நடத்துபவர்கள் அழைத்தால் மட்டுமே வந்து சிறப்பிப்பார்கள்.
சிறப்பு விருந்தினர்களாக யாரையும் அழைக்காமல்தான் நான் திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் முதல் நிகழ்வை நடத்த முடிவெடுத்தேன். பிறகு நகரத்திலுள்ள சில திரைப்படக் கல்லூரிகளில் படிக்கும்  மாணவர்களுக்கு என்னுடைய உதவியாளர் மூலமாக அழைப்பிதழ் (எளிமையான நோட்டீசாக, சிறப்பு விருந்தினரின் பெயர்கள் மற்றும் தலைப்பு இல்லாமலேயே) அனுப்பினேன். அப்படித்தான் பாலுமகேந்திராவின் சினிமாப்பட்டறைக்கும் அழைப்பிதழை கொடுத்தனுப்பினேன். அதை பார்த்த திரு பாலுமகேந்திரா அவர்கள் என்னுடைய உதவியாளரை அழைத்துப்பேசி, என்னை சந்திக்கச் சொன்னார். நான் மறுநாளே அவரை சென்று பார்த்தேன். தானாகவே இந்த சங்கமத்திற்கு வர ஒப்புக்கொண்டார்! அதன்பிறகுதான் நான் மற்ற விருந்தினர்களை அழைக்க ஆரம்பித்தேன்.
திரைப்படமும் இலக்கியமும் இணைய வேண்டும் என்று நமக்குள் பலரும் பேசுவார்கள். ஆனால் பிரபலமாகாத ஒருவர் இதுபோன்ற ஒரு சிறு முயற்சி எடுத்தால்அதற்கு அழைத்தாலே வந்து பங்கு பெற பலரும் தயங்குவார்கள். அப்படியிருக்க, அழைக்காமலேயே, இந்த சங்கமத்தை நடத்தும் நான் யார் என்றுகூட தெரியாமலேயே, இந்த சங்கமத்திற்கு வர ஒப்புக் கொண்ட அவரை எப்படி பாராட்டுவது என்று தெரியவில்லை.
அடுத்ததாக நான் குறிப்பிடவேண்டிய மிக முக்கியமானவர் திரு ஆர்.சி.சக்தி அவர்கள்! இவரை நான் நமது சங்கமத்திற்கு அழைக்கச் சென்றபோது வர சம்மதித்தது பெரிய விஷயமல்ல. ஆனால் சங்கமத்திற்கு வரும்நாளில் காலையில் அவருக்கு டயாலிசிஸ் என்ற சிகிச்சை நடந்தது. அப்படியிருந்தும் அவர் விழாவுக்கு சொன்னபடி வந்தார்! இதுபோன்ற நிகழ்வுகளுக்கு வராமல் இருக்க ஜலதோஷம் பிடித்தாலே அதை காரணமாக சொல்வது பொதுவான வழக்கம்தான். அப்படியிருக்க இந்த நிலையில் இவர் என் நிகழ்வுக்கு வந்ததை எப்படி பாராட்டுவது!
நல்ல படங்கள் மீது இவர்கள் கொண்ட அன்பு, இலக்கியத்தின் மீது இவர்கள் கொண்ட ஆசைஇவை இரண்டையும் இணைப்பதற்காக இவர்கள் காட்டிய அக்கறை, இவற்றைக்கண்டு  வியந்தேன். இவர்கள் எமது சிறப்பு விருந்தினர்களில் சிறப்பு விருந்தினர்கள்! அவர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளால் முடியாது.
திரைப்பட இலக்கியச் சங்கமத்தின் வெற்றிதான் அதன் அடுத்த கட்டமாக இப்படிப்பட்ட முயற்சிகளை எடுக்க எனக்கு ஊக்கம் தருகிறது.
உடல் அளவில் நம்மைவிட்டு பிரிந்தாலும் இன்றும் எனக்கு வழிகாட்டும் அந்த துரோணாச்சாரியர்களுக்கு ஒரு ஏகலைவனாக நான் இந்த நூலை காணிக்கையாக சமர்ப்பிக்கின்றேன்.


No comments:

Post a Comment

Let others know your opinions about this post