Monday 21 November 2016

என்னைப்பற்றி





என்னைப்பற்றி


என் மனதில் பட்ட கருத்துக்களைச் சொல்வதற்கு முன்பு என்னைப்பற்றி சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். இங்கே அது தேவையாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.
கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் வாய்ப்பைத் தேடி அலைந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு உதவி இயக்குநரின் வாழ்விலும் இதுபோன்ற பல அனுபவங்கள் இருக்கும். பல கதைகள் சொல்வதற்கு இருக்கும். அவற்றிற்கு ஒரு உதாரணமாகத்தான் நான் என்னைப்பற்றி இங்கே எழுதுகிறேன்.
நான் பிறந்தது தமிழ்நாட்டில். வளர்ந்தது கேரளத்தில். சிறுவயதிலிருந்தே எனக்கு திரைப்படங்கள் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்த விஷயத்தில் முக்கியமாக நான் என் தந்தைக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். அவர் ஒவ்வொரு வியாழக்கிழமையும் எங்கள் கிராமத்திலிருந்து சற்று தெலைவிலுள்ள வாரச்சந்தைக்குச் செல்வது வழக்கம். அப்படியே அங்கு அருகில் உள்ள தியேட்டரில் படமும் பார்ப்பார். தியேட்டருக்குச் சென்று படம் பார்க்கும் அனைவருக்கும் வியாழக்கிழமையின் முக்கியத்துவம் புரிந்திருக்கும்.
நாங்கள் கேரளத்தில் பாலக்காடு மாவட்டத்தில், தமிழ்நாட்டிலுள்ள கோயமுத்தூர் மாவட்டத்தின் எல்லையோரம் இருந்ததால் எங்கள்தியேட்டர்களில் தமிழ் மற்றும் மலையாள படங்கள் பரவலாக திரையிட்டு வந்தனர்.
மற்ற கிராமங்களில் நடப்பது போலவே, வழக்கமாக எங்கள் பிமற்றும் சிசென்டர்களிலும் வெள்ளிக்கிழமை திரையிட ஆரம்பித்த படம் திங்கட்கிழமை வரை மட்டுமே ஓடும். பிறகு செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை வேறு பழைய படங்கள் திரையிடப்படும். அந்த தியேட்டர்களில் ஒரு வாரம் முழுவதும் ஒரு படம் ஓடினால் அது கண்டிப்பாக பட்டணங்களிலும் நகரங்களிலும் நூறுநாள் ஓடிய சூப்பர் ஹிட் படமாகத்தான் இருக்கும்.
அப்படியில்லை என்றால் பழைய வெற்றிப்படங்கள்,  புகழ்பெற்ற ஆங்கிலம் அல்லது ஹிந்தி படங்கள் செவ்வாய்க்கிழமை திரையிடப்பட்டு வியாழக்கிழமை வரை ஓட்டப்படும். அந்த வகையில் எப்படியும் வியாழக்கிழமைகளில் எங்கள் கிராமத்துத் தியேட்டர்களில் திரையிடும் படங்கள் நல்ல படங்களாகவே இருக்கும்!
அதனால் தமிழ், மலையாளம், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி என நான்கு மொழி படங்களையும் பார்க்கும் வாய்ப்பு எனக்கு சிறுவயதிலிருந்தே கிடைத்தது.
நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு, பாலக்காடு பட்டணத்தில் படங்கள் பார்க்க ஆரம்பித்தேன். இந்தப் பட்டணத்துக்கு, ‘மாவட்ட தலைநகருக்கு திரைப்பட உலகை பொருத்தவரையில் ஒரு தனிச்சிறப்பு இருக்கிறது. நான்கு மொழிகளில் வரும் புதியபடங்களும் இங்கே வெளியிடப்படும். எண்பதுகளில் நான் எனக்காக ஒரு சர்வே எடுத்து பார்த்து ஒரு விஷயத்தை புரிந்து கொண்டேன். பாலக்காட்டில் ஒரு படம் ஒரு வாரம் ஓடுவது சகஜம். ஒரு வேளை ஒரு படம் இரண்டாவது வாரம் ஓடினால், அது சென்னையில் நூறு நாள்படமாக இருக்கும்.
ஒரு படம் இருபத்தைந்து நாட்கள் பாலக்காட்டில் திரையிடப்பட்டால் சென்னையில் அது வெள்ளிவிழா (25 வாரங்கள்) படமாக இருக்கும். பாலக்காட்டில் இருபத்தைந்து நாட்கள்தான் வெள்ளிவிழாவாக இருந்தது. அங்கே உள்ள சில பிரபல திரையரங்குகளில் அப்படி இருபத்தைந்து நாட்கள் ஒடி வெள்ளிவிழா கண்ட படங்களுக்கு கொடுக்கப்பட்ட ஷீல்டுகளை இன்றும் காணலாம்.
பாலக்காட்டில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் பார்ப்பது என்னுடைய வழக்கம். நன்றாக படித்தால் படம் பார்ப்பதில் தவறில்லை என்று என் தந்தை அதற்கு அனுமதி அளித்திருந்தார். அந்த காலத்தில் நான் ஒரு நல்ல மாணவனாக இருந்தேன். அதனால் அப்பாவிடமிருந்து தடை வரவில்லை. அப்படி எண்பதுகளிலும் தொண்ணூறுகளின் முதல் பகுதியிலும் வெளியான ஏறக்குறைய அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன்.
அந்த காலம்தான் சினிமாவிற்கு, குறிப்பாக தென்னகமொழி படங்களுக்கு பொற்காலம்! அரவிந்தன், பரதன், பாலசந்தர், ராய், கட்டக் போன்றவர்களின் க்ளாஸ் படங்கள் முதல் ஐவி சசி, ஹரிஹரன், பாசில், எஸ்பி.முத்துராமன், பி.வாசு, மணிரத்னம், தாசரி, சுபாஷ்கை போன்றவர்களின் மாஸ் படங்கள் வரையிலான அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன்.
நான் சினிமாவின் தீவிர ரசிகன். அஞ்சரைக்குள்ள வண்டிபோன்ற அடிமட்ட மசாலா படமாக இருந்தாலும் சரி, ‘எலிப்பத்தாயம்போன்ற உயர்தர கலைப்படமாக இருந்தாலும் சரி, அல்லது அவற்றிற்கு இடைப்பட்ட ஜனரஞ்சகப்படங்களாக இருந்தாலும் சரி, எல்லாவற்றையும் பார்ப்பதை ஒரு தினசரி கடமையாகவே செய்து வந்தேன்.
எனக்கு கதை எழுதும் திறமை இருக்கிறது. ஆனால் திரைத்துறைபற்றி எதுவும் தெரியாது. அதனால் பட்டையப்படிப்பை முடித்த்தும் முதலில் நான் சென்னைக்கு வந்து ஒரு எழுத்தாளர்-இயக்குனர் ஆக வாய்ப்பு தேடினேன். சில பிரபலங்களை சந்தித்தேன். எழுத்தாளர் வாய்ப்பும் கிடைத்தது. அது சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது மிக எளிது என்று என்னை நினைக்க வைத்தது. அதனால் நான் திரும்பி சென்றுவிட்டேன். விரைவில் ஒரு தயாரிப்பாளர்-இயக்குநராகவே வந்து விடலாம் என்ற முடிவுடன்!
எல்லா சாதாரண மனிதர்களின் வாழ்க்கையிலும் நடப்பது போல என் வாழ்க்கையிலும் பல திருப்பங்களும் மாற்றங்களும் நிகழ்ந்தன. நினைத்தபடி பணம் சம்பாதிக்க என்னால் முடியவில்லை. என்னுடைய வியாபார முயற்சிகளில் அனைத்து வீழ்ச்சிகளுக்கும் சினிமா பார்க்கும் ஆர்வம்தான் காரணமாக இருந்தது. அதனால் அங்குள்ள வேலைகளை விட்டுவிட்டு 1996 ஜனவரி முதல் தேதி சென்னைக்கு திரும்பினேன். இந்த முறை வெற்றிபெறாமல் கிராமத்துக்கு திரும்புவதில்லை என்ற முடிவுடன் வந்தேன். தமிழ் படங்களில் கவனம் செலுத்த ஆசைப்பட்டேன். அதுவும் இந்த முறை மனைவி மக்களையும் உடன் அழைத்து வந்தேன். (இந்த இடைப்பட்ட காலத்தில் அது மட்டும்தான் என் வாழ்க்கையில் நேரத்திற்கு நடந்திருக்கிறது.)
உதவி இயக்குநர்களின் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய அனைத்து கஷ்டங்களையும்நானும்அனுபவித்தேன். குடும்பத்தோடு அனுபவித்தேன்! பல வருடங்கள் நான் உதவி இயக்குநராக பணியாற்றுகிறேன் என்பது சொந்தபந்தங்கள் யாருக்கும் தெரியாமல் வைத்திருந்தேன். ஒரு சீரியலில் என்னுடைய பெயர் வசனகர்த்தா என்று வரும்வரை!
முதலில் ஒரு தெலைக்காட்சி தொடரிலும், பிறகு ஒரு படத்திலும் உதவி இயக்குநராக வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. பிறகு துணை இயக்குநர், எழுத்தாளர். இணை இயக்குநர் என்று படிப்படியாக வளர்ந்து விட்டேன். மாற்று மொழிகளை கற்பதற்கான ஆர்வம் எனக்கு இருப்பதால் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப்படங்களிலும் வேலைசெய்தேன். ஆனால் அதிக நேரமும் கதைகளை எழுதி வைப்பதற்கும் குடும்பத்திற்காக சம்பாதிப்பதற்கும் மட்டுமே செலவானது. அதற்காக மொழிபெயர்ப்பாளர், சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதுபவர் போன்ற பல பணிகளை செய்தேன். அதனால் ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பை தேடுவதை மட்டும் இன்றுவரை முறையாக செய்யாமல் விட்டுவிட்டேன்.
இதற்கிடையில் நான் திருக்குறளுக்கு திருக்குறள் வடிவிலேயே உரை எழுதி திருக்குறள் எளியகுறள்என்ற பெயரில் வெளியிட்டேன். தற்பொழுது அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் செய்து கொண்டிருக்கிறேன். அத்துடன் திரைப்பட இலக்கியச் சங்கமம்என்ற நிகழ்வை நடத்திவருகிறேன். தற்பொழுது என்னுடைய முதல் படத்தை இயக்குவதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளேன்.
இந்த நேரத்தில்தான் ஏதோ ஞானோதயம் பெற்றது போல இதுவரை கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்த்தேன். இதுவரை நடந்தவற்றையும், அந்த அனுபவங்கள் மூலமாக புரிந்தவற்றையும் அலசிப்பார்த்தேன். அப்படி கற்றுக்கொண்ட சில விஷயங்களால் பாதையை சற்று மாற்றிட முயற்சித்தேன். தொடர்ந்து முயற்சித்துக்கொண்டும் இருக்கிறேன்.
கடந்த 20 வருடங்களில் தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் திரைக்கதை எழுதுவதிலும், இயக்குவதிலும் பல இயக்குநர்களிடமும் உதவியாளராகவும் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தேன். இடைப்பட்ட நேரங்களில் சென்சார் ஸ்க்ரிப்ட் எழுதுவதில் துவங்கி தயாரிப்பு நிர்வாகிகளின் உதவியாளர், மொழிபெயர்ப்பாளர், என பல பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபட்டேன்.
அதனால் நான்கு தென்னக மொழிகளிலும், ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் திரைக்கதை எழுதவும், படிக்கவும், பேசவும் கற்றுக்கொண்டேன். இயக்குநராக செய்ய வேண்டிய பணிகளுடன் தயாரிப்பாளர் செய்ய வேண்டிய பணிகளையும் கற்றுக்கொண்டேன். நான் உதவியாளராக பணிபுரிந்த படங்களின் இயக்குநர்கள் அனைவரும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர்களாக இருந்தது இந்த விஷயத்தில் எனக்கு மிகவும் உதவியாகவும் தூண்டுதலாகவும் இருந்தது.
முதன் முதலில் இயக்குநராக பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது அந்த படத்தை தயாரித்து இயக்கவேண்டும் என்ற எண்ணத்தை எனக்குள் விதைத்தது இந்த அனுபவம் தான். அதனாலேயே இன்னொரு தயாரிப்பாளரிடம் வாய்ப்புத்தேடுவதற்கோ, அதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபடவோ என் மனம் என்னை அனுமதிக்கவில்லை. பல நேரங்களில் சூழ்நிலைகளை எண்ணி பிற தயாரிப்பாளர்களிடம் ஒரு கதையைச்  சொல்லி படத்தை இயக்கும் வாய்ப்பை பெற ஆசைப்பட்டதுண்டு. ஆனால் முழு மனதுடன் அதற்காக முயற்சி செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் திரைப்படத் தயாரிப்பு பற்றி என் மனதில் எழுந்த பல கேள்விகளும் அதற்கு கிடைத்த பதில்களும்தான். அவற்றின் தொகுப்புதான் இந்த திரைப்படம் தயாரிப்பாளர்களின் கலை’.
இதைப்பற்றி நான் கற்றுக்கொண்ட, தேடி அறிந்து கொண்ட, செயல்படுத்த திட்டமிட்ட அனைத்தையும் முழுவதுமாக ஒவ்வொருவரிடமும் சொல்லி புரியவைக்க முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. அதனால் சொல்ல வேண்டிய விஷயங்களில் முக்கியமானவற்றை முதலில் சுருக்கமாக தொகுத்து எழுத முடிவு செய்தேன். உண்மையில் இதில் குறிப்பிட்ட எல்லா தலைப்புகள் பற்றியும் விரிவாக, தனித்தனியாகவே ஒவ்வொரு புத்தகம் எழுத முடியும். இருப்பினும் முதல் படியாக அனைத்தையும்  சுருக்கமாக எழுதுவதுதான் நல்லது என தோன்றியது.
ஏறக்குறைய இருபது வருடங்கள் கடந்த பிறகு, இயக்குநராக வேண்டும் என்று முழுமூச்சாக முயற்சி செய்யும்போதுதான் ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது, ‘நான் வந்த பாதை தவறுஎன்று! முழுமையாக தவறு என்று சொல்ல முடியாது, இருந்தாலும் தேவையற்ற காலவிரயம் மட்டும்தான் பலனாக கிடைத்தது என்பதே உண்மை.
அந்த எண்ணத்தால் இப்போது ஒரு படத்தை இயக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் நான் அனுபவித்து அறிந்துகொண்ட, புரிந்துகொண்ட, உணர்ந்துகொண்ட சில விஷயங்களை என்னைப்போல் திரைத்துறையில் சாதிக்க வந்து, தொடர்ந்து இந்த நகரத்தில் வாய்ப்புத்தேடி அலைபவர்களுக்கும், இனிமேல் வருபவர்களுக்கும் சொல்லவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
திரைத்துறையை அறிந்துகொள்வதற்கு, குறிப்பாக திரைத்துறையில் அனைவரும் எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகளை தெரிந்துகொள்வதற்கும், அவற்றிற்கான காரணங்களை மற்றும் தீர்வுகளை காண்பதற்கும் என்னவழி என்று யோசித்ததன் பலன் இந்த நூல்.
(தற்பொழுதுதான் இவற்றையெல்லாம் நான் புதியதாய் உணர்ந்து இதை எழுதுகிறேன் என்று எண்ணவேண்டாம். பல வருடங்களாக இந்த கருத்துக்கள் என் மனதில் எழுந்துகொண்டுதான் இருந்தன. இவற்றில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று மீண்டும் மீண்டும் ஆராய்ந்த பிறகுதான் இதை மற்றவர்களிடம் சொல்லலாம் என முடிவு செய்தேன். இத்தனை வருடங்கள் திரைத்துறையில் பணியாற்றியும்கூட இயக்குநர் என்று பெருமைப்படுவதைவிட தயாரிப்பாளர் ஆகிவிடவேண்டும் என்றே என் மனம் விரும்பியது. அதனாலேயே தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கான கில்டில் மூன்று வருடங்களுக்கு முன்பே நானும் ஒரு தயாரிப்பாளர் என்று ஒரு நிறுவனத்தை பதிவுசெய்துள்ளேன்.)


No comments:

Post a Comment

Let others know your opinions about this post